Last Updated:
மனைவி ராதிகாவை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த கணவர் பப்லு, இதுகுறித்து அவரது மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், தனது மனைவியை அவரது காதலனுடன் கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சாந்த்கபூர் பகுதியில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, திருமணத்திற்கு முன்பே ராதிகா தனது கிராமத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பிறகும் அந்த உறவு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராதிகாவின் கணவர் பப்லு, அவரை கண்டித்துள்ளார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, மனைவி ராதிகாவை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த கணவர் பப்லு, இதுகுறித்து அவரது மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், பப்லு ராதிகாவிடம் 2 குழந்தைகளையும் தானே வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு அவரும் சம்மதிக்கவே, குழந்தைகளை பப்லு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: “ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசே சட்டம் இயற்றலாம்” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து பப்லு PTI செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, “எனக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தவிர்ப்பதற்காக நான் அவர்களின் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். சமீபத்திய நாட்களில், கணவர்கள் தங்கள் மனைவிகளால் கொல்லப்படுகிறார்கள். மீரட்டில் நடந்த சம்பவத்தை பார்த்த பிறகு, நாங்கள் இருவரும் நிம்மதியாக வாழ என் மனைவியை அவளுடைய காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்” என்று கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், தகாத உறவில் இருந்ததைக் கண்டுபிடித்த, கடற்படை அதிகாரியான கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மிற்குள் (DRUM) அடைத்து மனைவி சிமெண்ட் போட்டு பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
March 28, 2025 10:58 AM IST


