போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் “போஃபர்ஸ் கேட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த ஊழலில் இடைத்தரகராகச் செயல்பட்ட குவாட்ரோச்சியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இருந்த நெருங்கிய நட்பு குறித்தும் அவர் இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தில் போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள விஷயங்கள் கவலை தருகின்றன. பாதுகாப்பு ஒப்பந்தங்களை தனக்குச் சாதகமாக இறுதிசெய்து கொள்வதற்காக குவாட்ரோச்சி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அவரது மனைவி சோனியா காந்திக்கும் தனக்கும் இருந்த நெருங்கிய நட்புறவை பயன்படுத்திக் கொண்டார்.
ராஜீவ் காந்தியின் பதவிக்காலத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பான கோப்புகள் குவாட்ரோச்சிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். தான் தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை வழங்கும் வகையில் கோப்புகளை அவர் திருத்துவதற்காக இப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது பதவிப் பிரமாணத்தை மீறிய செயல் இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதில் அளிக்க வேண்டும். போஃபர்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர் குவாட்ரோச்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கணக்குகள் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சிபிஐ-யால் கடந்த 2005இல் முடக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இவையெல்லாம் இந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் ஆகாதா? சோனியா காந்தி குடும்பத்தின் தலையீடு காரணமாகவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. குவாட்ரோச்சியுடனான தங்கள் குடும்பத்தின் உறவுகள் தொடர்பாக விரிவாக விளக்கும் வரை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதுவரை அவர்களுக்கு எம்.பி.யாகத் தொடரும் உரிமை இல்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த நாட்டின் பக்கம் நிற்கப் போகிறாரா? ஊழல் செய்த சோனியா காந்தி குடும்பத்துடன் நிற்கப் போகிறாரா?

