Last Updated:
மஹாராஷ்ட்ராவில் ஐபிஎல் போட்டியை செல்போனில் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ராம்தேவ் யாதவ் பணிநீக்கம் செய்யப்பட்டார். பயணி ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மஹாராஷ்ட்ராவில் ஐ.பி.எல். போட்டியை செல்போனில் பார்த்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. நாடே எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பிஎல். போட்டிகள் தொடங்கியது முதல் கிரிக்கெட் ஜூரம் ரசிகர்கள் மத்தியில் பற்றிக் கொண்டது. தற்போது செல்போனிலேயே லைவ் மேட்ச் பார்க்கும் வசதி பரவலாக கிடைப்பதால் தனது வீட்டுக்கு பதிலாக பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து விடும் அளவுக்கு தலை குனிந்து மேட்ச் பார்த்தபடி பலரும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? என போர்க்கொடி தூக்கிய பேருந்து ஓட்டுநர் ஒருவர், செல்போனில் மேட்ச் பார்த்தபடி தனது கடமையை ஆற்றிய திடுக்கிடும் சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை மஹாராஷ்டிரா மாநிலம் தாதரில் இருந்து ஸ்வர்கேட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் ராம்தேவ் யாதவ் என்பவர் ஓட்டிச் சென்றார். கிரிக்கெட் வெறியரான ராம்தேவ் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது ஐபிஎல் மேட்ச் தொடங்கியதால் அவரது ஐம்புலன்களும் ஆட்டம் கண்டுவிட்டது.
சுமார் 50 பேருடன் பேருந்தை ஓட்டிச் சென்றாலும், ஐபிஎல் மேட்ச் பார்க்க வில்லை என்றால் மோட்சம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டார். கொல்கத்தாவா? பெங்களூருவா? ரஹானேயா? ரஜத் படிதாரா? யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வி அடி மனைதை அரித்து எடுக்க பேருந்து ஓட்டுநர் ராம்தேவ் தனது செல்போனை எடுத்து பேருந்திலேயே ஸ்டியரிங் முன்னால் ஸ்கிரீன் செட்டப் செய்தார். ஐபிஎல் மேட்சை கோலாகலமாக பார்த்துக் கொண்டே குத்துமதிப்பாக பேருந்தை ஓட்டுக் கொண்டு பறந்தார்.
கோலி சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் பேருந்தின் வேகமுள் நூறைக் கடந்தது. பேருந்து பேய் வேகத்தில் ஓட்டியதால் சந்தேகமடைந்த பயணி ஒருவர் எழுந்து வந்து பார்க்க ஐபிஎல் அட்டகாசம் அரங்கேறுவதை கவனித்தார். உடனே தனது செல்போனை எடுத்து வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி விட்டார். அது மட்டுமின்றி அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆகியோரை அவர் டேக் செய்திருந்தார். விஷயம் விஸ்வரூபம் எடுக்க பேருந்து ஓட்டுநரை வீட்டிலிருந்து பத்திரமாக ஐபிஎல் மேட்ச் பார்க்குமாறு கேட்டுக் கொண்டு சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
March 25, 2025 3:11 PM IST
விராட் கோலி சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் 100 கி.மீ வேகம் சென்ற பேருந்து.. பயணிகளுக்கு ஷாக் கொடுத்த பஸ் டிரைவர்!


