Last Updated:
IPL 2025 | சில ஆண்டுகள் முன்பு இர்ஃபான் பதான் போலவே சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்லே போன்றோர் இதே குற்றச்சாட்டில் வர்ணனை செய்வதற்கு தடையை சந்தித்திருந்தனர்
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வர்ணனை குழுவில் இடம்பெறாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நேற்று தொடங்கியது. ஆர்சிபி அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் குழுவில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் இடம்பெறவில்லை. வழக்கமாக ஐபிஎல் வர்ணனை குழுவின் அங்கமாக இருந்துவந்த இர்ஃபான் பதான், இம்முறை வர்ணனையாளர்கள் பட்டியலில் கூட இடம்பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வர்ணனையின் போது இந்திய கிரிக்கெட்டின் வீரர்களை குறிவைத்து இர்ஃபான் பதான் மோசமாக வசைபாடுவதாக சில வீரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த முறை அவர் வர்ணனை குழுவில் ஈடுபடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வர்ணனையில் சில இந்திய வீரர்களை குறிவைத்து இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துவருவதாக சர்ச்சைகள் எழுந்தது.
இதன்காரணமாக ஒரு வீரர் இர்ஃபான் பதானின் போன் நம்பரை பிளாக் செய்யும் அளவுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான போட்டியின்போது இர்ஃபான் பதான் அந்த வீரர் குறித்து கடுமையாக விமர்சித்ததால், அதுதொடர்பாக பிரச்சனை எழ, அதற்கு பின்னர் தான் போன் நம்பரை பிளாக் செய்யும் அளவுக்கு அந்த வீரர் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோல் வீரர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவதாக வீரர்கள் தரப்பில் தொடர் புகார்கள் வரவே, அதன் காரணமாக இர்ஃபான் பதான் வர்ணனை குழுவில் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சில ஆண்டுகள் முன்பு இர்ஃபான் பதான் போலவே சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்லே போன்றோர் இதே குற்றச்சாட்டில் வர்ணனை செய்வதற்கு தடையை சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 23, 2025 12:38 PM IST


