Last Updated:
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் இருந்த அடாரி தொம்புருவை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் மலைக்கிராமம் ஒன்றில் ஒரு குடும்பத்தினர் மட்டும் எப்படி இவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள் என பொறாமை கொண்ட கிராம மக்கள் அந்த வீட்டு நபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் அரக்கு வனப்பகுதியில் தொம்பிரிகுடா கிராமம் அமைந்துள்ளது. தொம்புரிகுடா கிராமத்தில் 15 வீடுகள் உள்ள நிலையில் அவற்றில் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 60 வயதான அடாரி தொம்புரு என்பவர் குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று உயர்நிலையில் இருந்து வந்தது. தங்களது பொருளாதார நிலை மட்டும் அதளபாதாளத்தில் உள்ளது, இந்த தொம்புரு குடும்பத்தினர் கையில் மட்டும் எப்படி பணம் புரள்கிறது என அப்பகுதி மக்கள் பொறாமை கொள்ள ஆரம்பித்தனர்.
மேலும் தங்களுடைய குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருப்பதற்கு அடாரி தொம்புரு தான் காரணம் என்றும் நினைக்க ஆரம்பித்தனர். அடாரி தொம்புரு அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று மாந்திரீகம் செய்ய கற்று வந்து செய்வினை செய்து தங்களை பொருளாதார ரீதியாக உயர விடாமல் தடுக்கிறார் என்றும் அவர்கள் பேசிக் கொண்டனர். எனவே அவரை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்த கிராம மக்கள் அடாரி தொம்புரு வீட்டிற்கு கும்பலாக நேரில் சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த கும்பல் அடாரி தொம்புருவை வெளியில் இழுத்து வந்து கற்கள் மற்றும் கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்து கீழே விழுந்தவர் மீது கையோடு எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஊற்றி அந்த கும்பல் உயிருடன் தீவைத்தது. வலி தாங்காமல் அலறி துடித்த அடாரி தொம்புரு சற்று நேரத்தில் தீயில் கருகி அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடாரி தொம்புரு உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஒரு கிராமமே சேர்ந்து தனிநபர் ஒருவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 22, 2025 8:16 PM IST
‘மந்திரவாதி’ என நினைத்து ஒரு கிராமமே சேர்ந்து ஒருவரை தீவைத்து எரித்து கொன்ற கொடூரம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!


