அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி அச்சுறுத்தல், உலகளாவிய பெட்ரோலிய விலைகளில் ஏற்ற இறக்கம் மற்றும் ரத்தினக் கற்கள், நகைத் துறையை பாதிக்கக்கூடிய தடைகள் உள்ளிட்ட காரணங்களால், 2025 பிப்ரவரியில் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி 10.85 சதவீதம் (ஆண்டுக்கு ஆண்டு) குறைந்து $36.91 பில்லியனாக உள்ளது. இது தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வர்த்தக பற்றாக்குறை இந்த மாதம் $14.05 பில்லியனாகக் குறைந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைவு என்பது உற்று நோக்க வேண்டியது. ஏனெனில், தங்கம் மற்றும் பெட்ரோலியத்தால் இறக்குமதிகள் 16.3 சதவீதம் வரை குறைந்து, $50.96 பில்லியனாக உள்ளது என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
2025 நிதியாண்டு கடினமான ஆண்டாக இருந்தாலும், சரக்கு மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த ஏற்றுமதியில் $800 பில்லியன் டாலரை அடைவதை நோக்கி நாம் வேகமாக நகர்ந்து வருவதாக வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் கடந்த திங்களன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள்
ஏப்ரல் 2 முதல் இந்தியா போன்ற அதிக வரி வசூலிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருப்பது சரக்குகளின் ஆர்டர்களை பாதித்துள்ளதாக பிசினஸ்லைனுக்கு அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பரஸ்பர வரிகளுக்கு ஏப்ரல் 2 காலக்கெடு காரணமாக, இறக்குமதியாளர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களது சில ஆர்டர்களை தற்செயலாக நிறுத்தி வைத்துள்ளார்கள். ஏனெனில், புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் இந்த நேரத்தில் ஆர்டர் செய்யும் பட்சத்தில், சரக்குகளை கொண்டு வரும் நீண்ட பயணம் ஒன்றரை மாதங்கள் வரை எடுத்துக் கொண்டால், சரக்குகள் தரையிறங்கும் நேரத்தில் அவற்றுக்கு வரி விதிக்கப்படும். எனவே, என்ன வகையான வரிகள் விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளாமல், இறக்குமதி செய்ய அவர்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்ட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: இந்தியாவில் ஸ்டீல் விலை உயருமா…? ஸ்டீல் பொருட்களுக்கு 12% தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு திட்டம்…!
இவ்வாறாக, வரிகளின் மூலம் தடங்கல் இருந்தபோதிலும், பிப்ரவரி 2025இல் அமெரிக்கா, இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி சந்தையாக இருந்தது. பிப்ரவரியில் ஏற்றுமதி 10.37 சதவீதம் அதிகரித்து $7.91 பில்லியனாக இருந்தது. சில சரக்குகள் வரிகள் விதிக்கப்படுவதை நினைவில் கொண்டு, முன்கூட்டியே திட்டமிட்டதால் இத்தகைய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பரஸ்பர வரிகள் விதிக்கப்படும்போது அதன் உண்மையான தாக்கம் தெளிவாகத் தெரியும் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
பிப்ரவரி 2025இல் இந்தியாவின் பெட்ரோலியம் அல்லாத பிற பொருட்களின் ஏற்றுமதி $337.01 பில்லியனாக இருந்தது. இது பிப்ரவரி 2024இல் $316.64 பில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் வைரங்கள் மீதான தடைகள் காரணமாக, பிப்ரவரி 2025இல் ஏற்றுமதி 20.74 சதவீதம் குறைந்து, $2.53 பில்லியன் டாலராக இருந்தது. இதன் காரணமாக, ஏற்றுமதியால் பாதிக்கப்பட்ட மற்றொரு துறையாக ரத்தினங்கள் மற்றும் நகைகள் துறை இருப்பதாக வர்த்தக செயலாளர் கூறினார்.
இறக்குமதி குறைவு
பிப்ரவரி 2025இல் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதியை விட பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக, தங்கம் இறக்குமதி $2.3 பில்லியனாகவும், பெட்ரோலியம் இறக்குமதி $11.8 பில்லியனாகவும் குறைந்தது. இதுவே, முந்தைய மாதத்தில் முறையே $2.68 பில்லியனாகவும், $13.4 பில்லியனாகவும் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Investing in Gold | எஸ்பிஐ கோல்டு ஃபண்டு vs ஆபரணத் தங்கம்: 1 வருடத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் அதிக வருமானம் தருவது எது…?
நிலவி வரும் உலகளாவிய வரிப் போர் காரணமாக, ஏற்றுமதியில் சவால்களை எதிர்கொண்டாலும், இறக்குமதியில் ஏற்பட்ட பெரிய சரிவு வெளிநாட்டுப் பொருட்களுக்கான தேவைகள் குறைவதைக் குறிக்கிறது. மேலும், இது உள்நாட்டுத் தொழில்களுக்கான வாய்ப்புகளையும் முன்னிலைப்படுத்துகிறது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (FIEO) தலைவர் அஸ்வனி குமார் கூறினார்.
இதன் விளைவாக, சரக்குகளின் வர்த்தக பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது. இது பிப்ரவரி 2024இல் 19.51 பில்லியன் டாலராக இருந்தது. இது இந்தியாவின் வர்த்தகத் துறை மறுசீரமைக்கத் தொடங்கியதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறியாக தெரிவதாக அவர் கூறினார்.
முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் (ICRA) தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயரின் கருத்துப்படி, வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு பெரும்பாலும், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்ட தாக்கமே காரணம் என்கிறார்.
சரக்கு ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஆண்டு சரிவின் ஒரு பகுதி, லீப் மாதமான பிப்ரவரி மாதத்துடன் தொடர்புடைய அடிப்படை ஆண்டு விளைவுக்குக் காரணமாக இருக்கலாம். வர்த்தக பற்றாக்குறை 2025 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், சராசரியாக இருந்த $23 பில்லியனை விடக் கணிசமாக குறைவாக இருந்தது. இதன் அடிப்படையில், 2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இது 5 பில்லியன் டாலர் உபரியைக் காணும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்திற்கு சமம் என்று அவர் கூறினார்.
March 21, 2025 6:26 PM IST
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல், பெட்ரோல் விலையில் தாக்கம்… பிப்ரவரியில் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி சரிவு..!

