Last Updated:
காயம் காரணமாக ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த முறை தொடக்க ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில், முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தான் இருக்கப்போவதில்லை என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். ராஜஸ்தான் அணி, முதல் மூன்று போட்டிகளில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுடன் மோதுகிறது. இந்த போட்டிகளில், இளம் வீரரான ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என சஞ்சு சாம்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தில் சாம்சனின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது பேட்டிங் செய்யத் தகுதியுடன் இருந்தாலும், விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங்கில் ஈடுபட மருத்துவக் குழு சஞ்சு சாம்சனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் முழு உடற்தகுதியுடன் கேப்டன் பொறுப்பை மீண்டும் சஞ்சு சாம்சன் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஐசிசி அறிவித்தததை விட மூன்று மடங்கு..! சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அள்ளி கொடுத்த பிசிசிஐ
ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் அசாம் அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் ரியான் பராக்கிற்கு உள்ளது. தற்போது இளம் வீரர்களும் அனுபவசாலிகளும் உள்ள ராஜஸ்தான் அணியை ரியான் பராக் வழிநடத்துவார் என சஞ்சு சாம்சன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், 23 வயதான ரியான் பராக், விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். மேலும் அணியின் முழு ஆதரவுடன் சிறப்பாக செயல்படுவேன் என ரியான் தெரிவித்துள்ளார்.
March 20, 2025 2:20 PM IST


