Last Updated:
Inspiring Storie| செந்தமிழ் செல்வன் இவர் பிறக்கும்போது வளர்ச்சி குறைபாடுடன் பிறந்துள்ளார். இவர் தற்போது மல்லர்கம்பம், சிலம்பம் விளையாட்டில் பல சாதனைகள் புரிந்து வருகிறார்.
“யார்ரா அந்த பையன்” – “நான் தான் அந்த பையன்” என்று ஆச்சரியப்பட்டு சொல்லும் அளவுக்கு மல்லர் கம்பத்திலும், சிலம்பத்திலும் பல சாதனைகளை புரிந்து வருகிறார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன்.
“ஆள் இரண்டு அடி தான்” ஆனால் சாதனையோ பல அடி உயரம். இதுவரை 48 மேடைகள் வெற்றி மேடை!!! உன்னால் முடியாது, நீ என்ன பண்ணப் போறனு? குடும்பமே கேள்வி எழுப்பிய போதிலும், நீ குள்ளமா இருக்க உன்னால என்ன பண்ண முடியும்? என வளர்ச்சி பற்றி பலரின் கேலி கிண்டலுக்கு உள்ளான அவரது உயரத்தை வைத்தே, மனம் தளராமல், நம்பிக்கையுடன் பல பிரிவில் தன்னுடைய கால் தடத்தை பதித்து வருகிறார் செந்தமிழ் செல்வன்.
விழுப்புரம் மாவட்டம் பாப்பனம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் பிறக்கும்போது வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்துள்ளார். தந்தை குணா, தாயார் தனலட்சுமி. இவருக்கு தம்பியும் உள்ளார். பிறக்கும்போது வளர்ச்சி குறைபாடுடன் பிறந்த காரணத்தால் தந்தை தாயார் செந்தமிழ் மீது எந்த ஒரு பற்றும் இல்லாமல் இருந்து வந்தனர். பல கேலி கிண்டல்களுக்கு ஆளானதால், மனம் உடைந்து, யாருடனும் ஒத்துப்போகாமல் ஒதுங்கி நிற்க தொடங்கினார். அதன் பிறகு மாமா தனசேகர் அரவணைப்பில் தன்னுடைய பள்ளி படிப்பு தொடங்கினார்.
பனையபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில், சுரேந்தர் என்ற நபரை பார்க்காமல் இருந்திருந்தால் செந்தமிழ் இவ்வளவு சாதனைகள் புரிந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்? அந்த ஒரு சந்திப்பு அவனுடைய வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. சுரேந்தர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மல்லர்கம்பம், சிலம்பம் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறார். அவர் செந்தமிழை அழைத்து, உனக்கு மல்லர் கம்பம், சிலம்பம் கற்றுத்தரட்டுமா? நீ ஆர்வமாக கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்கும்போது அவன் நம்பிக்கையுடன் காலத்தில் இறங்க ஆரம்பித்தான். ஒன்றரை வருடமாக மல்லர்கம்பம், சிலம்பம் பிரிவில் பயின்று வருகிறார்.
கூனி குறுகி நின்ற வைத்தவர்கள் மத்தியில், தற்போது 48 சாதனை மேடைகள் ஏறி சாதனை படைத்துள்ளார் செந்தமிழ் செல்வன். மல்லர் கம்பம் பிரிவில் மாவட்ட அளவில் சென்றுள்ளார். மேலும் உலக சாதனை படைத்த மல்லர் கம்பம் பிரிவிலும் இடம் பெற்றுள்ளார். சிலம்பத்தில் மாநில அளவில் சென்றுள்ளார். அது தவிர ஜிம்னாஸ்டிக், கத்தி கேடயம் போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஒரு ஓரமா நின்ற சிறுவன் தற்போது ஊரே திரும்பி பார்க்கிற அளவிற்கு வந்துள்ளான். அவனை கிராமமே கொண்டாடி வருகிறது. இவனை கண்டிப்பாக தமிழகமே திரும்பி பார்க்கிற அளவிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் சிலம்பம் பயிற்சியாளர் சுரேந்தர் ஈடுபட்டு வருகிறார், இவருக்கு உறுதுணையாக செந்தமிழ் செல்வன் தன்னுடைய உழைப்பை அளித்து வருகிறார்.
எவ்வளவு தடைகள் வந்தாலும் பல கேலி, கிண்டல்கள் இருந்தாலும் என்னுடைய சாதனை பயணத்திலிருந்து நான் பின் வாங்க மாட்டேன் எனவும் கண்டிப்பாக என் உருவ கேலி செய்தவர்கள் மத்தியில் “எனக்கென ஒரு அடையாளத்தை பிடிப்பேன்” எனவும் மனம் தளராத நம்பிக்கை நாயகன் செந்தமிழ் செல்வன் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 17, 2025 4:13 PM IST

