Last Updated:
நாங்கள் ஒருபோதும் ஏழையாக இருந்ததாக உணர்ந்தது கிடையாது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு கடினமாக உழைத்தோம்
பள்ளிக் காலத்தின்போது தனது வெள்ளை ஷூக்களை சுத்தம் செய்வதற்காக சாக்பீஸ் துண்டுகளை பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ஏழ்மையில் வாழ்ந்த காலத்தை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பாட்காஸ்டரும் செயற்கை நுண்ணறிவு (AI)ஆய்வாளருமான லெக்ஸ் பிரிட்மேனுக்கு (Lex Fridman) அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது,
”நான் அப்போது பள்ளிக்கு செல்லக்கூடிய சிறுவனாக இருந்தேன். எனது சிறு வயது வாழ்க்கை மிகவும் ஏழ்மையாக இருந்தது. இருப்பினும் ஏழ்மையின் சுமையை நாங்கள் உணரவில்லை. உதாரணத்திற்கு, எப்போதுமே காலில் ஷூ அணிந்திருக்கும் நபர் அது இல்லாமல் போகும்போது மிகவும் வருத்தப்படுவார். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் சிறுவயதிலிருந்தே ஷூ அணிந்து கிடையாது. அதனால் நாங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
நான் ஷூ அணியாமல் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். அதனைப் பார்த்த எனது உறவினர் எனக்கு ஒரு ஜோடி ஷூ வாங்கி தந்தார். அந்த காலத்தில் அதன் விலை 10 அல்லது 12 ரூபாயாக இருக்கும். அது வெள்ளை நிற ஷூ என்பதால் எளிதாக கறை படிந்து விடும். அதனை எப்படி சுத்தம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மாலை நேரத்தில் ஸ்கூல் முடிந்த பின்னர் நான் உடனடியாக வீட்டுக்கு திரும்ப மாட்டேன். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று அங்கு ஆசிரியர்கள் வீசி எறிந்த சாக்பீஸ் துண்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்வேன். அவற்றை தண்ணீரில் ஊற வைத்து பசை போன்று மாற்றி, அந்த பசையை எனது ஷூவில் தடவி அதிலுள்ள கறைகளை போக்குவேன். இப்படி செய்யும் போது கறை இல்லாமல் ஷூ பளபளப்பாக இருக்கும்.
சிறுவயதில் நான் ஒழுங்காக ஆடை அணிந்தேனா என்பது பற்றி எனக்கு நினைவு இல்லை. ஆனால் எதை அணிந்தாலும் மிக சரியாக அணிவேன். அந்த காலத்தில் துணிகளை அயன் செய்வதற்கு எந்த வசதியும் இருக்காது. நாங்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்குவோம். அந்த செம்பு பாத்திரத்தை துணி மீது வைத்து நான் இஸ்திரி செய்வேன்.
இதையும் படிங்க – “நான்கு மாதங்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே” – பிரதமர் மோடி பகிர்ந்த விரத முறைகள்!
அதை அணிந்து நான் பள்ளிக்கு செல்வேன். இப்படித்தான் நான் வாழ்ந்தேன். அது எனக்கு மிகவும் சந்தோஷம் தந்தது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு கிடைக்கும் அனுபவத்திற்காக நன்றி உணர்வுடன் இருக்கிறேன். நாங்கள் ஒருபோதும் ஏழையாக இருந்ததாக உணர்ந்தது கிடையாது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு கடினமாக உழைத்தோம்” என்று தெரிவித்தார்.
March 16, 2025 9:43 PM IST


