Last Updated:
2025-26 நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
2025 – 26ஆம் நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு மானியங்கள், உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு சுற்றுலா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வேளாண் துறைக்கு ரூ.45,661 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.525 கோடியும், பயிர் கடன் மானியத்திற்காக ரூ.853 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் 35 லட்சம் ஏக்கரில் பயிர்களை காப்பீடு செய்ய பட்ஜெட்டில் 841 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து உணவு மானியத்திற்காக ரூ.12,500 கோடியும், கூட்டுறவு பயிர் கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உழவர்களுக்கு விதைகள், உரங்கள் விற்பனை செய்ய ஆயிரம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
டெல்டா மற்றும் பிற மாநிலங்களில் நெல் இயந்திர நடவு மானியம் மற்றும் விதைகள் வழங்க 160 கோடி ரூபாயும், நெல் உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களை அறிய 100 விவசாயிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதி உதவிகள் உயர்வு : வேளாண்மைத்துறை அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு
இதுதவிர ரூ.215.80 கோடி மதிப்பில் 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10.50 கோடி மதிப்பில் சிறு, குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு ரூ.1.5 கோடியில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
March 15, 2025 12:18 PM IST


