சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 8 கோடி ரூபாய் செலவில், 50 உழவர் சந்தைகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும், உழவர் சந்தையில் விற்கப்படும் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் 20 உழவர் சந்தைகள் இணைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர்களின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனக் கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
இதேபோன்று, 480 கோடி ரூபாய் மதிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
இதையும் படிங்க : வேளாண் பட்ஜெட் : கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!
120 கோடி ரூபாய் மதிப்பில், 6 ஆயிரத்து 179 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், 360 ஊரக ஏழை மகளிருக்கு, 50 விழுக்காடு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, தமிழ்நாடு அரசின் 4 சதவிகித வட்டி மானியத்துடன், 5 ஆயிரம் சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க நிதிஉதவி செய்யப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
March 15, 2025 7:18 PM IST
TN Agriculture Budget 2025 | உழவர் சந்தையில் விற்கப்படும் விளைபொருட்கள் இனி வீட்டிற்கே சென்று விநியோகம்… வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

