Last Updated:
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் பான் மசாலா தடை விதிக்கப்பட்டது. மும்பையில் போலி அதிகாரி ஒருவர் பொது வெளியில் எச்சில் துப்பியவரிடம் 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தார்.
பொது வெளியில் எச்சில் துப்பினால் கடுமையான அபராதம் விதிக்கும் முறையை பல்வேறு மாநிலங்களும் அமல்படுத்த தொடங்கியுள்ளன. சட்டப்பேரவை வளாகத்தில் பான் மசாலாக்களை பயன்படுத்த உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் மிகப்பெரிய பிரச்சனை பொது வெளியில் எச்சில் துப்புவது. நாகரிகமற்ற முறையில், இடம், பொருள், ஏவல் என எதை பற்றியும் கவலைப்படாமல் பொது வெளியில் எச்சில் துப்பும் வழக்கம் பலரிடம் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொது வெளியில் எச்சில் துப்பினால் கடுமையான தண்டனை விதிக்கின்றன. இந்தியாவிலும் பல மாநிலங்கள் பொது வெளியில் எச்சில் துப்ப தடை விதித்துள்ளன. ஆனால் அதனை பின்பற்ற யாரும் முன்வருவதில்லை. அங்கு இங்கு என இல்லாமல் பான்பராக் போட்டு எச்சில் துப்பும் வழக்கம் சட்டப்பேரவை வளாகம் வரை நீண்டுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில், எம்எல்ஏ ஒருவர் பான்பராக் போட்டு எச்சில் துப்புவதை நேரடியாக கண்ட சபாநாயகர் மஹானா, கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தார். மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். எச்சில் துப்பியது யார் என கூற மறுத்துவிட்ட மஹானா, சட்டப்பேரவை வளாகத்தில் தூய்மையை பேண வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள் : சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முயற்சி… டெல்லியில் விரைவில் படகு சவாரியை அறிமுகப்படுத்த அரசு திட்டம்…!
இதேபோல், பொது வெளியில் எச்சில் துப்புவதற்கு எதிராக கொல்கத்தா காவல்துறை விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் பொது வெளியில் எச்சில் துப்ப ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை தீவிரப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன் படி பொது வெளியில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. தொடர்ந்து அதே தவறை இரண்டாவது முறையாக செய்தால் அபராதத் தொகை ஐந்தாயிரமாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மும்பையிலோ சட்டத்தை கையில் எடுத்த பலே கில்லாடி ஒருவர், பொது வெளியில் எச்சில் துப்பியவரிடம் 40 ஆயிரம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். மும்பையின் ஐரோலியில் வசந்த் என்ற நபரிடம், தான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டவர், பொது வெளியில் எச்சில் துப்புவது மிகப்பெரிய குற்றம் என்றும், அதற்காக அபராதமாக 68 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை நம்பிய வசந்த் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று ஏடிஎம்மிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்துள்ளார். அடுத்த ஏடிஎம்மிலிருந்து மீதத் தொகையை எடுக்கும் முன்னர், பாதியிலேயே வசந்தை இறக்கிவிட்டு விட்டு சிட்டாக பறந்து விட்டார் அந்நபர். இச்சம்பவம் இப்போது காவல்துறை வரை சென்றுள்ளது.
March 13, 2025 7:29 PM IST


