Last Updated:
தெற்கு ஆசியாவிலேயே மிக நீண்ட காலமாக சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஆயுதக்குழுவான பலூச் விடுதலை ராணுவத்தின் வரலாற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை சிறைபிடித்ததன் மூலம் மீண்டும் ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம். இந்த அமைப்பு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. எரிவாயு, நிலக்கரி, கனிம வளம் நிறைந்த இப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
வரலாற்று ரீதியாக, பலுசிஸ்தான் தனித்துவமான கலாச்சார மற்றும் பழங்குடி அடையாளங்களைக் கொண்ட ஒரு சுதந்திரப் பகுதியாக இருந்தது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி பலுசிஸ்தான் மாகாணம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தானை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது.
பலுசிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைத்ததுமே அங்கு பிரிவினை கோரிக்கை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்த நேரத்தில், பலுசிஸ்தானின் அங்கமாக இருந்த கலாட் மாநிலத்தின் இளவரசர் கரீம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் 1960 களில், ஒரு ஆயுதக்குழு உருவானது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்களை அந்நாட்டு ராணுவம் ஒடுக்கி வந்தது.
தற்போது பல பிரிவினைவாத குழுக்கள் பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பழமையானது மற்றும் மிகவும் திறன்வாய்ந்த அமைப்புகளில் ஒன்று பிஎல்ஏ என்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்.
இந்த அமைப்பு முதன்முதலில் 1970-களின் முற்பகுதியில் உருவாகியதாக நம்பப்படுகிறது. சுல்பிகர் அலி பூட்டோவின் அரசுக்கு எதிராக பலுச் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கியது. ஆனால் ஜியாவுல் ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு பலுச் சமூக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. அதன் முடிவில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவமும் கலைக்கப்பட்டது.
பின்னர் அது மீண்டும் 2000-ஆம் ஆண்டில் செயல்பட தொடங்கியது. அன்று முதல் இந்த அமைப்பு பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் 2005 ஆம் ஆண்டு கோலுவுக்குப் பயணம் செய்த போது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
2007 ஆம் ஆண்டு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கடற்படை மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தங்களது பலத்தை வெளிக்காட்டியது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்.
பலுசிஸ்தானின் வளங்களின் மீது தங்களுக்கே முதல் உரிமை இருப்பதாகக் கூறி வரும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தானை பாகிஸ்தான் மற்றும் சீன அரசாங்கத்தின் செல்வாக்கிலிருந்து விடுவித்து கொள்ள போராடி வருகிறது. பொருளாதார சுரண்டல் மற்றும் அரசியல் ரீதியாக புறக்கணிப்பு ஆகியவற்றால் வேரூன்றிய இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
March 13, 2025 7:39 AM IST
மீண்டும் மிகப்பெரிய தாக்குதலால் உலகின் கவனத்தை திருப்பிய பலூச் விடுதலை ராணுவம்… யார் இவர்கள்?