லக்னோ,வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வரும் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேச் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘சவுபாய்’ என்ற பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கான பாதையில் சுமார் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த 10 பள்ளிவாசல்களையும் திரையிட்டு மூடுவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சம்பல் காவல்துறை எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், “சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.