மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பல நாடுகள் பங்கேற்கும் ஐசிசி போட்டிகளில், இந்தியாவின் கோப்பை கனவுக்கு நியூசிலாந்து அனேக முறை தடை போட்டதால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்தது நியூசிலாந்து. கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் கங்குலி சதத்தால் 264 ரன்களை எடுத்தது இந்தியா. 132 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தாலும், கிறிஸ் கெய்ர்ன்ஸ் அதிரடியாக சதம் விளாச, கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து. இந்தப் போட்டி நியூசிலாந்துக்கு மறக்க முடியாத போட்டியாக அமைய, இந்திய அணிக்கு ஆறாத வடுவாக அமைந்தது.
கங்குலி சதம், சச்சினின் 69 ரன்கள் என 50 ஓவர்களில் இந்திய அணி 264 ரன்கள் என நல்ல ஸ்கோரை பெற்ற பின்னும் இந்திய அணி ஏன் தோற்றது?. கங்குலியும் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 26.3 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சச்சின் டெண்டுல்கர் 69 ரன்களுக்கு ரன் அவுட் ஆக, பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. எனினும், கங்குலி தொடர்ந்து ஆடி, 111 பந்துகளில் சதம் அடித்துதுடன் மொத்தம் 117 ரன்கள் தனியொரு ஆளாக சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை 264 ரன்கள் என உயர்த்தினார். அந்தக் காலகட்டத்தில் இதுவொரு நல்ல ஸ்கோர். அப்படி இருந்தும் இந்திய அணி தோற்றது ஏன்?. இந்தக் கேள்விக்கு விடை, இந்திய அணியின் பௌலிங் தான்.
கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் கிரெய்க் ஸ்பியர்மேன் இருவரும் ஆரம்பத்திலேயே இந்திய வீரர்களின் பௌலிங்கில் வீழ்ந்தனர். நாதன் ஆஸ்டில் மற்றும் ரோஜர் டூஸ் ஆகியோர் முறையே 37 மற்றும் 31 ரன்கள் எடுத்து அவர்களும் விரைவாகவே வெளியேறினர். ஒருகட்டத்தில் 132 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.
இருப்பினும், கிறிஸ் ஹாரிஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸின் பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் ஆதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக முடிவு கட்டியது. 6வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இக்கூட்டணி. இதில் 113 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 102 ரன்கள் எடுத்த கிறிஸ் கெய்ர்ன்ஸ் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தது.
Also Read | கொல்கத்தா அணியின் வெற்றியில் கவுதம் காம்பீரின் பங்களிப்பு.. அனுபவம் பகிர்ந்த ஷாரூக்கான்
கடைசி 2 ஓவர்களில் 13 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலைவர 49வது ஓவர் வீசிய வெங்கடேஷ் பிரசாத் ஓவரில் மட்டும் லெக் பை மூலம் 7 ரன்கள் உட்பட 10 ரன்கள் ஒரே ஓவரில் வழங்கப்பட்டன. த்ரில்லர் படத்துக்கு இணையான கடைசி ஓவரில் தேவையான 3 ரன்னை அதனை எளிதாக எடுத்து நியூசிலாந்து கோப்பை தட்டிச் சென்று இந்தியர்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திச் சென்றது. இந்திய அணியில் இந்தப் போட்டியில் தோல்வியை தழுவ மிக முக்கிய காரணம், பௌலர்கள் கொடுத்த எக்ஸ்ட்ரா ரன்கள். இந்திய பௌலர்கள் 7 நோ பால், ஒரு ஒயிட், 15 லெக் பைஸ் என மொத்தம் 23 ரன்களை வாரி வழங்கினர். இதனால் நியூசிலாந்து தனது முதல் ஐசிசி கோப்பையை உச்சி முகர, இந்திய அணியோ சோகத்துடன் திரும்பியது.
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு அதே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் நாளை மோதவுள்ளன. இதில் மீண்டும் பழைய வரலாறு திரும்புமா அல்லது ஆறாத வடுவுக்கு மருந்தாக இந்திய அணி வெற்றிபெறுமா? என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 08, 2025 4:07 PM IST

