பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள், கடத்தல் குற்றச்சாட்டுகளால் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த தன்னைத் தானே சுவாமி என்று அறிவித்துக்கொண்ட நித்யானந்தா, கைலாசா என்ற தீவை வாங்கி, அங்கு ஆசிரமம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், உலக நாடுகளில் சிகிச்சை பெற அவர் கோரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்பது பற்றியும், பல ஆண்களின் ஏக்கமாக இருக்கும் கைலாசா பற்றியும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான், மகளிர் நாளில் அவர் வெளியிட்டிருக்கும் விடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.
வேதங்களில், கற்புள்ள பெண்களுக்காக மாதந்தோறும் ஒரு மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதாகவும் அது எப்படி சாத்தியம்? என்றும் கேள்வி எழுப்பிய நித்யானந்தா, அதற்கு விளக்கத்தையும் கொடுக்கும் விடியோ ஒன்று கைலாசாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப்பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.
மகாபாரதத்தின் முடிவில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்து மரபணு அழியாமல் இருப்பதை உறுதி செய்தார். எப்படி என்று யோசிக்கிறீர்களா? கண்டுபிடிக்க பாருங்கள்! உங்கள் தனித்துவமான திறனை உணர்ந்து உங்கள் வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் அதை அடைய வேண்டும் என்று பதிவிட்டு நித்யானந்தா பேசும் விடியோ இணைக்கப்பட்டுள்ளது.
அந்த விடியோவில், இந்து மதப்படி, ஒவ்வொரு மாதமும் மூன்று முறை மழை பொழியுமாம். அதாவது, ஒரு பௌர்ணமிக்கும் அடுத்த பௌர்ணமிக்கும் இடையேயான ஒரு மாத காலத்துக்குள் பூமியில் மூன்று மழை பொழியுமாம். ஒவ்வொரு மாதமும் இவ்வாறு பொழியும். அதில், கற்புடை பெண்டிர்க்கு ஓர் மழை, வேதம் ஓதும் வேதியர்க்கு ஓர்மழை, செங்கோல் வளையா செங்கனனுக்கு ஓர் மழை என்று கூறியிருக்கிறார்கள்.

