பிற நாடுகள் மீது மட்டுமல்ல… தன் நாட்டினர் மீதும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதில் ஒரு பகுதியாக, தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இனி அமெரிக்காவில் கல்லூரி உள்ளிட்ட எந்தவொரு கல்வி நிறுவனமும் சட்டத்திற்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அதை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து செல்லும் பணம் நிறுத்தப்படும். அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையிலிடப்படுவார்கள் அல்லது அவர்களது நாட்டிற்கே நிரந்தரமாக திருப்பி அனுப்பப்படுவார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் என்றால் அவர்கள் நிரந்தரமாக கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது குற்றத்திற்கு ஏற்ப கைது செய்யப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் சட்டத்திற்கு புறம்பான போராட்டங்கள் என்று கூறுவது, இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் சம்பந்தமாக பேசுவது குறித்து தான்.
“கல்வி நிறுவனங்களுக்கு பணம் நிறுத்தப்படும்’ என்று ட்ரம்ப் அறிவிப்பது இது ஒன்றும் புதிது அல்ல. அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற புதிதிலேயே, கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் கல்வி நிறுவனங்கள், மூன்றாம் பாலினம் குறித்து கற்றுக்கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரசிடம் இருந்து செல்லும் பணம் நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

