Last Updated:
கொல்கத்தா அணி மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இதனையொட்டி கடந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்டு முக்கிய ஆட்டக்காரர்கள் வெவ்வேறு அணிகளில் எடுக்கப்பட்டனர். அந்த வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் பங்கேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியால் 26 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டார்.
கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் ரூ. 23 கோடியே 75 லட்சம் கொடுத்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார். கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் மூத்த வீரர் அஜங்கியா ரகானேவை கேப்டனாக நியமித்து கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த சீசனில் சென்னை அணிக்காக ரஹானே விளையாடி 13 இன்னிங்ஸ்களில் 242 ரன்கள் எடுத்தார்.
அவரை அடிப்படை தொகையான ரூ.1.50 கோடி கொடுத்து கொல்கத்தா அணி ஏலத்தில் பெற்றது. இதன் பின்னர் நடந்த சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை ரகானே வெளிப்படுத்தினார். அவர் அந்த தொடரில் மட்டும் 469 ரன்கள் குவித்தார். சராசரி 58 ரன்களாகவும், ஸ்ட்ரைக் ரேட் 160 க்கும் அதிகமாகவும் இருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக அஜங்கியா ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அனுபவம் மிகுந்த லீடர் என்றும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் தலைமைப் பண்பு கொண்டவர் என்றும் இந்த இருவரும் இணைந்து அணியை மீண்டும் பட்டம் வெல்ல வைப்பார்கள் என கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணி மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
March 03, 2025 8:26 PM IST


