Last Updated:
கரீம்நகர் மாவட்டத்தில் ராஜ்குமார், சுஷ்மிதாவின் தாய் சாமந்தியை கொலை செய்ய முயன்றார். கிராம மக்கள் தடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சுட்டலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணை உருகி உருகி காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் காதல் சுஷ்மிதாவின் தாய் சாமந்திக்கு பிடிக்கவில்லை. மகளிடம் இந்த காதல் எல்லாம் வேண்டாம், விட்டு விடு என எவ்வளவோ எடுத்துக் கூறியிருக்கிறார். சுஷ்மிதாவோ கேட்பதாக இல்லை.
அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவனின் நிலை குறித்து மகளுக்கு எடுத்துக் கூறிய சாமந்தி கண்ணீருடன் பேச மகள் உருகி விட்டார். தாயின் பரிதாப நிலையை புரிந்து கொண்ட சுஷ்மிதா தனது காதலை தியாகம் செய்ய முன் வந்தார். காதலன் ராஜ்குமாரை அழைத்து அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறி காதலை விட்டு விடுவோம் எனக் கூற பொங்கி எழுந்திருக்கிறார் காதலன்.
அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தன்னுடைய காதலுக்கு வில்லியாக புறப்பட்ட காதலி சுஷ்மிதாவின் தாய் சாமந்தியை தீர்த்துக் கட்டி விட்டால் அனைத்தும் சரியாகி விடும் என நினைத்திருக்கிறார். அதற்காக திட்டம்போட்ட அவர், காதலியின் வீட்டுக்குச் சென்று பட்ட பகலில் சாமந்தியுடன் கடும் தகராறு செய்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய அவர் சாமந்தியை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதனை கவனித்த கிராம மக்கள் ராஜ்குமாரை மடக்கிப்பிடித்து சாமந்தியை மீட்டதுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை பிடித்துக் கொடுத்தனர். காதலி கிடைக்காத ஆத்திரத்தில் காதலியின் தாயை தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
March 03, 2025 10:09 AM IST


