Last Updated:
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது.
கேரளாவில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த மாணவரை கொல்வதற்காக வாட்ஸ்அப் குரூப் அமைத்து, சதித் திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு முகமது சாஹபாஸ் என்பவர் தமரச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், மற்ற பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கும் இடையே கடந்த 23-ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகியுள்ளது.
இதன்பின்னர், மாணவர் முகமது சாஹபாஸை கொல்வதற்கு மாணவர்கள் சிலர் திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழன் அன்று முன்விரோதம் ஏற்பட்ட மாணவர்கள் முகமது சாஹபாஸை தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அவர் வீட்டுக்கு செல்லாமல், அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர், தனது நண்பரின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு அடைந்தது. இதையடுத்து, அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் உடனடியாக கொண்டு சென்றனர்.
அப்போது கோமா நிலைக்கு சென்ற முகமது சாஹபாஸ், நள்ளிரவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க – Vantara | புலி முதல் குரங்கு வரை.. வந்தாராவுக்கு வந்தது எப்படி?
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது. மேலும், “வாட்ஸ்ஆப்” குரூப் அமைத்து கொலை செய்வதற்கு அந்த மாணவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும், தற்காப்பு கலைக்கு பயன்படுத்தப்படும் நுன்சாக் என்ற தற்காப்பு ஆயுதத்தை பயன்படுத்தி அவர்கள் முகமது சஹாபாஸை தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
March 02, 2025 2:07 PM IST


