Last Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைனின் கனிம வளங்களைப் பங்கிட்டு கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார்.
ரஷ்ய தாக்குதலில் சிக்கி தவிக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேச உள்ளார். அப்போது உக்ரைனில் உள்ள கனிம வளங்களை பங்கிட்டு கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரில், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அமெரிக்கா, ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது. முன்னாள் அதிபர் பைடன் உக்ரைனுக்கு அளித்து வந்த நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவுடன் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இதனை தொடர்ந்து டிரம்ப்பை. வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் போது, உக்ரைனின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் போன்ற அரிய கனிமங்களும், லந்தனம், சீரியம், நியோடைமியம், எர்பியம். ஸ்கேண்டியம் போன்ற அரிய தாதுக்களும் இருக்கின்றன. பூமியின் பரப்பளவில் பூஜ்யம் புள்ளி 4 சதவிகிதமே கொண்ட நாட்டில் 5 சதவிகித முக்கிய கனிமங்கள் பரவி கிடக்கின்றன. அரிய வகை என ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்ட 34 கனிமங்களில் 22 உக்ரைனில் கிடைக்கின்றன. ரஷ்ய படையெடுப்புக்கு முன்னர், உக்ரைனில் 7 சதவிகித டைட்டானியம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மேலும் 5 லட்சம் டன் லித்தியமும், ஒன்றில் ஐந்து பங்கு கிராஃபைட்டும் உக்ரைனில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க | நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் தாய்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
இந்தக் கனிமங்கள் மின்சார வாகனங்கள் , விமானங்கள், பேட்டரி, சூரிய மின்சாரம், செமி கண்டக்டர்கள் உற்பத்தியிலும் விண்வெளி துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரிய வகை கனிமங்களையும் தாதுக்களையும், உலகிலேயே சீனா தான் அதிக இருப்பு வைத்திருக்கிறது. அமெரிக்கா மற்ற நாடுகளையே நம்பி உள்ளது. அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு சீனா விதித்த தடை அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணங்களால் தான் உக்ரைன் கனிமங்களை பயன்படுத்த திட்டமிடுகிறார் அதிபர் டிரம்ப். ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை, நிதியாக அளித்துள்ளது. ஜெலன்ஸ்கியுடன் கனிம ஒப்பந்தம் மேற்கொண்டால் 43 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தொகையை இரு நாடுகளும் பங்குபோட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளன. இதன் மூலம், கொடுத்த பணத்தை பலமடங்காக வசூலித்து தான் ஒரு சிறந்த பிஸினஸ் மேன் என நிரூபிக்க முயற்சிக்கிறார் டிரம்ப்.
February 27, 2025 3:59 PM IST


