Last Updated:
கேரளா உயர் நீதிமன்றம், நான்கு வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி, தனது பிறப்பு உறுப்பில் வலியிருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே குழந்தைக்கு ஏதேனும் உடல் உபாதை இருக்கும் என அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், குழந்தைக்கு பாலியல் கொடுமை நடந்திருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரை எடுத்து விசாரித்த காவல்துறையினர், சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு, மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், குற்றவாளிக்கும் உடல் சார்ந்த இணைப்பு ஏதும் நடக்கவில்லை என வாதிடப்பட்டது.
மேல்முறையீடு விசாரணையை நிறைவு செய்த கேரளா உயர் நீதிமன்றம், சிறுமியின் பிறப்பு உறுப்பைத் தொடுவதே பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் எனக் கூறி கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.
February 25, 2025 9:45 PM IST


