Last Updated:
Champions Trophy: மழை காரணமாக தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா போட்டியில் டாஸ் தாமதம். சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணியின் போட்டிகள் துபாயில். அரையிறுதிக்கு இரு அணிகளும் வெற்றி தேவை.
மழை காரணமாக தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் களைகட்டி வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது. இதனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்தது. எஞ்சிய போட்டிகளில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல்பிண்டியில் நடத்தப்படுகின்றன. உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொடராக பார்க்கப்படும் சாம்பியன் டிராபி, பாகிஸ்தானில் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராவல்பிண்டி மைதானத்தில் தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடக்கிறது. ஆனால், மழை காரணமாக போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை விட்டதும் டாஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படும் பட்சத்தில் இன்றைய போட்டி கைவிடப்பட்டால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் மட்டுமின்றி, குரூப் பி பிரிவில் அரையிறுதி தகுதிச் சுற்று சுவாரஸ்யமாகிவிடும்.
போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும். ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றிருப்பதால் இது அவர்களுக்கு 3வது புள்ளியாக கிடைக்கும். இரு அணிகளும் புள்ளிகளில் சமநிலையில் இருந்தாலும், ஆஸ்திரேலியாவை விட தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஏனென்றால், ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் +0.475. தென்னாப்பிரிக்கா அணியின் ரன் ரேட் +2.140. தென்னாப்பிரிக்கா தனது அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் போதும், அரையிறுதி வாய்ப்பை பெற்றுவிடும்.
எனினும், இவை குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற இரண்டு அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளைப் பொறுத்து அமையும். தற்போது ஒரு வெற்றி கூட பெறாமல் 0 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் தகுதி பெற ஒரு சிறிய வாய்ப்பு வழங்கப்படும்.
இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர்கள் 4 புள்ளிகளைப் பெறலாம். அப்படி நடந்தால் தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் இருந்து வெளியேற்றக்கூடும். ஆப்கானிஸ்தானுக்கும் இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர்களும் 4 புள்ளிகளைப் பெற முடியும். இதனால் ஆஸ்திரேலியா போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம்.
நாளை இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதன்பின் ஆப்கானிஸ்தான் பிப்.28 ஆஸ்திரேலியா அணியுடனும், மார்ச்.1ம் தேதி இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகின்றன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 25, 2025 4:17 PM IST


