கல்வி, திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை:
செப்டம்பர் 12, 1963-ல் பிறந்த ரேகா ஜுன்ஜுன்வாலா, மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை 1987-ல் திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் ராகேஷ் ஒரு பிரபலமான பங்கு முதலீட்டாளராக மாறியதால் அவர்களின் செல்வம் கணிசமாக உயர்ந்தது. இந்த தம்பதியருக்கு நிஷ்டா, ஆர்யமான் மற்றும் ஆர்யவீர் ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்களிடம் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தபோதிலும், ரேகாவும் ராகேஷும் ஒப்பீட்டளவில் தங்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்தாமல் தனிப்பட்ட வாழ்க்கையை வாழத் தேர்ந்தெடுத்தனர்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது பங்கு வர்த்தக நிபுணத்துவத்திற்காக அறியப்பட்டவர். மேலும் அவரது முதலீட்டுத் திறன் காரணமாக இந்தியாவின் வாரன் பஃபெட் என்றும் அழைக்கப்பட்டார். அவர் இறப்பதற்கு சற்று முன்பு, ஆகஸ்ட் 2022-ல் தொடங்கப்பட்ட புதிய குறைந்த கட்டண விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனத்திலும் முதலீட்டாளராக இருந்தார்.
ரேகா ஜுன்ஜுன்வாலா – ரத்தன் டாடா: இருவருக்கும் இடையேயான தொடர்பு
ரேகா ஜுன்ஜுன்வாலா, மறைந்த ரத்தன் டாடாவின் டாடா குழுமத்திற்குச் சொந்தமான டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். 2023-ம் ஆண்டில், அவரது நிறுவனத்தில் இரண்டு வாரங்களில் பங்கு வர்த்தகம் மூலம் ரூ.1000 கோடியை கிட்டத்தட்ட சம்பாதித்தார். இது ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு குறிப்பிடத்தக்க லாபமாக அமைகிறது.
ரூ.370 கோடி மதிப்பிலான அரிய வில்லா மாளிகை
ஜுன்ஜுன்வாலாவிடம் உள்ள கணிசமான செல்வம் காரணமாக, அவரால் கடலைப் பார்த்தபடி இருக்கும் கண்கவர் கட்டிடம் முழுவதையும் சொந்தமாக வாங்க முடிகிறது. இவரது பிரதான இல்லமான RARE வில்லா, மலபார் ஹில்லில் உள்ள ரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள 14 மாடி மாளிகையாகும்.
முன்னர் ரிட்ஜ்வே அடுக்குமாடி குடியிருப்புகள் என்று அழைக்கப்பட்ட இந்த வில்லா, அவரது மறைந்த கணவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவால் 2013 மற்றும் 2017-க்கு இடையில் இரண்டு கட்டங்களாக மொத்தம் ரூ.370 கோடிக்கு வாங்கப்பட்டது. 70,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம், மும்பையின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுப்புறங்களில் ஒன்றில் அமைந்துள்ளது.
ரேகா ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு:
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி, 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.67,737 கோடி) சொத்து மதிப்புடன், ரேகா ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் இரண்டாவது பணக்காரப் பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார். அவரது வெற்றிக்கு, புத்திசாலித்தனமான பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் கையகப்படுத்துதல்கள் ஆகியவையே காரணம். இதன் மூலம் ஒரு நிதி அதிகார மையமாக அவரது பெயர் நிலைத்திருக்கிறது.
February 22, 2025 6:52 PM IST

