Last Updated:
கே.எல். ராகுல் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என கௌதம் கம்பீர் கூறினார்.
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான முதல் விருப்ப விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் தான் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால் ரிஷப் பந்த் இந்திய அணியில் இடம் பிடிப்பதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது.
இந்தியா இங்கிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில் விளையாடிய இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட களமிறங்காத ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுல் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சற்று தடுமாறிய போதிலும், ஐந்தாவது வரிசையில் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “கே.எல். ராகுல் தான் எங்கள் முதன்மை விக்கெட் கீப்பர். ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் தற்போது கே.எல் தான் சிறப்பாக செயல்படுகிறார். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.
சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ள கே.எல்.ராகுலை 6ஆவது பேட்ஸ்மேனாக களமிறக்கி, அக்சர் படேலை ஏன் அவருக்கு முன் களமிறக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், “யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும். புள்ளிவிவரங்களையும் சராசரிகளையும் மட்டும் பார்த்து வீரர்களைத் தேர்வு செய்வதில்லை. அந்த நிலையில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என அணி நினைக்கிறதோ அவர்கள் களமிறக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே சதம்..! ஷுப்மன் கில் முறியடித்த சாதனைகள்
மேலும், அணியில் கூடுதல் பந்துவீச்சு ஆப்ஷன் தேவை என்பதற்காகவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டதாகவும், ஜெய்ஸ்வாலுக்கு நீண்ட எதிர்காலம் இருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கம்பீர் தெரிவித்தார். “விக்கெட் எடுக்கும் வீரர் ஒருவர் அணியில் தேவைப்பட்டது. வருண் சக்கரவர்த்தி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது. ஆனால் 15 பேர் கொண்ட அணியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க இயலாது” எனக் கம்பீர் தெரிவித்தார்.
February 13, 2025 12:21 PM IST


