லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் அவர்கள், வாரத்திற்கு 90 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற தனது கருத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது வீட்டிலிருந்தே பணிபுரிவது குறித்து, மீண்டும் ஒரு முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார்.
சென்னையில் நேற்று (11.02.2025) நடைபெற்ற CII-யின் மிஸ்டிக் சவுத் குளோபல் லிங்கேஜஸ் உச்சி மாநாடு 2025 இல் உரையாற்றிய சுப்பிரமணியன், “நான் 1983 ஆம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தபோது, என்னுடைய மேலதிகாரி என்னைப் பார்த்து, ‘நீங்கள் சென்னையைச் சேர்ந்தவர் என்றால், டெல்லிக்குச் சென்று பணிபுரிய வேண்டும்’ என்று கூறினார். ஆனால் இன்றைய சூழலில், நான் சென்னையைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்குச் சென்று பணிபுரியும்படி கூறினால், அவர் உடனடியாக வேலையை விட்டு விலகி விடுவார்” என்று குறிப்பிட்டார்.
மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதை விட, வீட்டிலிருந்தே பணிபுரிவதையே விரும்புவதால், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“(தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த) ஒரு பணியாளரை அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு நாம் வலியுறுத்தினால், அவர் உடனடியாக வேலையை விட்டு விலகி விடுகிறார். இதுதான் இன்றைய சூழல். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம் உலகம் முற்றிலும் மாறிவிட்டது. நம்மில் பலர், குறிப்பாக என்னைப் போன்ற தலைமுறையினர், இந்த மாறும் உலகத்திற்கும் அதன் பணியிடப் போக்குகளுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நெகிழ்வான கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்காக வேறு இடங்களுக்குச் செல்ல தயாராக இல்லை. ஒருவேளை அவர்களின் சொந்த ஊர்களில் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கலாம், அல்லது அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் போக்கு இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பாதிக்கும்” என்று எச்சரித்தார்.
இதையும் படிக்க: பிரபல நடிகையின் ஆதரவுடன் ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தொடங்கிய சர்வதேச நீச்சல் வீராங்கனை…!
கட்டுமானத் துறையில் பணியாளர்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்துப் பேசிய சுப்பிரமணியன், “தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியே வந்து பணிபுரிய விரும்பவில்லை. MGNREGA, ஜன் தன் கணக்குகள் மற்றும் நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டங்கள் போன்றவை தொழிலாளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என்று கூறினார்.
எஸ். என். சுப்பிரமணியன் சமீபத்தில் தனது 90 மணி நேர வேலை வாரக் கருத்துக்காகப் பொதுமக்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள், அக்டோபர் 2023 இல், இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் போட்டியிட இந்திய இளைஞர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
February 12, 2025 3:20 PM IST


