Last Updated:
பிரான்ஸ் ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது எனக் கூறினார்.
இரண்டு நாடுகள் பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி இன்று தலைமை வகித்தார்.
பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் சென்ற பிரதமர், மழைக்கு நடுவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தரையிறங்கினார். அவருக்கு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புடன் அரசு முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாரீஸில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மேள தாளங்கள் முழங்க “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” பாடல் பாடி இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அரசின் உயரதிகாரிகள், மாகாண பிரதிநிதிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாரீஸில் இன்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டிற்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படும் என அச்சம் இருக்கிறது. ஆனால் உண்மையில் தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போவதில்லை என்பதுதான் வரலாறு காட்டுகிறது.
21ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்மை ஒன்றிணைக்கிறது. விவசாயம் மற்றும் கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கவல்லது” எனத் தெரிவித்தார்.
February 11, 2025 9:57 PM IST


