
அவர் எழுப்பிய கேள்விகள், “இத்திட்டம் துவங்கியதில் இருந்து இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கிய நிதியின் விவரங்கள் மாநில, யூனியன் பிரதேச வாரியாக என்ன? இத்திட்டத்தின் பயனாளிகள் விவரங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக என்ன? தமிழ்நாட்டில் ஆரம்ப கடன் தொகை ரூ. 10,000 சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்திய பிறகு, ரூ. 20,000 மற்றும் அதற்கு மேற்பட்ட ரூ. 50,000 கடன்களைப் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை அரசாங்கம் தொகுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள், மாவட்ட வாரியாக; மற்றும் மோசடி மற்றும் தகுதியற்ற பயனாளிகள் இத்திட்டத்தை அணுகுவதைத் தடுக்க அரசு எடுத்த, எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?” என கனிமொழி எம்பி எழுத்துப்பூர்வமாக கேள்விகளை கேட்டிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையமைச்சர் தோகன் சாகு எழுத்துப்பூர்வமான பதில் எழுதார். “பிரதமர் சுவநிதி என்பது ஒன்றிய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எந்த நிதியும் வெளியிடப்படுவதில்லை. கடன் தொகை வங்கிகளால் நேரடியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
ஜனவரி 30, 2025 நிலவரப்படி, பிரதமர் சுவநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 68.02 லட்சம் ஆகும். இவர்களில் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பயனாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 429 பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 8,966 பேர் பயன் பெற்றுள்ளனர்.
ஜனவரி 30, 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில், சுமார் 2.28 லட்சம் பயனாளிகள் முதல் தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1.37 லட்சம் பயனாளிகள் 2வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். மேலும், 45,363 பயனாளிகள் 2வது தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். இவர்களில் 26,955 பயனாளிகள் 3வது தவணை கடனைப் பெற்றுள்ளனர்.
மோசடியான மற்றும் தகுதியற்ற பயனாளிகள் PM SVANidhi திட்ட சலுகைகளை அணுகுவதைத் தடுக்கவும், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைச் செயலாக்குவதை எளிதாக்கவும், ஒரு முழுமையான ஐடி போர்டல் -www.pmsvanidhi.mohua.gov.in உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழல் தடுப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்
இந்த போர்டல் மூலமே அனைத்து சாலையோர வியாபாரிகளும் திட்ட சலுகைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். செயல்பாடுகளை எளிதாக்க, மொபைல் விண்ணப்பங்களை அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும் சாலையோர வியாபாரிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்காக, சரிபார்ப்புக்குப் பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் (CoV) அல்லது பரிந்துரை கடிதம் (LoR) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன்களை அனுமதிப்பதற்கு முன்பு பெறப்பட்ட விண்ணப்பங்களையும் ஆய்வு செய்கின்றன” என்று ஒன்றிய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
February 07, 2025 10:24 PM IST

