Last Updated:
உச்சநீதிமன்றம், மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், சரமாரியான கேள்விகளை எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் 3ஆவது நாளாக விசாரணை நடந்தது. அப்போது, அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே மசோதாக்களை அவர் கையாண்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி வாதிட்டார். மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பும் ஆளுநர், அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா கூறினார்.
அதே போன்று மசோதாக்கள் மீது எவ்வித முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால், அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என நீதிபதி கூறிய போது, அரசியல் காரணங்களுக்காக துணைவேந்தர் மசோதா கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
மத்திய சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த துணைவேந்தர் நியமன மசோதாவிற்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார் என்று தலைமை வழக்கறிஞர் வினவினார். மேலும், மசோதாவில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை சேர்க்க ஆளுநர் விரும்பியதாகவும் வெங்கட் ரமணி குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய நீதிபதிகள், 2 ஆண்டுகளாக அவரிடம் உள்ள மசோதா குறித்து மாநில அரசிடம் தகவல் பரிமாற்றம் ஏதேனும் இருந்ததா என்று வினவினார். அதற்கு இல்லை என்று பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், 2 மாதங்களில் ஆளுநர் தனது முடிவை தெரிவித்து விட்டதாகவும், அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினார்.
பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம், துணைவேந்தர்கள் குறித்த அக்கறையில் மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்தால், அதற்கான காரணத்தை குடியரசு தலைவருக்கு குறிப்புடன் ஆளுநர் அனுப்பினாரா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குடியரசு தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பும் போது அதற்கான காரணத்தை கூற தேவையில்லை என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நாட்டின் குடியரசு தலைவரே காரணத்தை கேட்டு தெரிந்து கொள்வாரா என்று பதில் கேள்வி எழுப்பினார். ஆக, அரசியலமைப்பு பிரிவுகளை புறந்தள்ளி விட்டு தான் ஆளுநர் செயல்படுவார் என்பதை தங்கள் வாதத்தின் அடிப்படையில் புரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தலைமை வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
February 07, 2025 3:51 PM IST
“ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது” தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து


