Last Updated:
விராட் கோலி முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, விராட் கோலி வலது முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டார். உடற்தகுதிக்கு பெயர் பெற்ற கோலி, இந்தப் போட்டியில் விளையாடாமல் போனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதல் ஒருநாள் போட்டிக்கு டாஸ்க்கு முன்னதாக கோலி பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் மெதுவாகவே நகர்ந்தார்.
போட்டிக்கான டாஸ் போடும்போது, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலியின் முழங்கால் பிரச்சினை காரணமாக அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை எனத் தெரிவித்தார். அதே நேரம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்கள்.
“டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழில் வெளியான செய்தியின்படி, சனிக்கிழமை கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்குள் கோலி முழுமையாகக் குணமடைந்து விளையாடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பாட் கம்மின்ஸ் உள்பட 4 பேர் விலகல்.. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி
“முந்தைய நாள் பயிற்சியின்போது கோலியின் முழங்கால் நன்றாகவே இருந்தது. ஆனால், ஹோட்டல் திரும்பிய பிறகுதான் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இருப்பினும், அது பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை, கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார்” என்று அணி வட்டாரங்கள் தெரிவிப்பதாக “டைம்ஸ் ஆஃப் இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கோலி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழங்காலுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வாரா அல்லது கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணியுடன் செல்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான தொடருக்குப் பிறகு கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அதற்கு முன்னதாக, 2023 உலகக் கோப்பை தொடரில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார்.
இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பிறகே இதுகுறித்துத் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. பும்ராவின் காயம் தொடர்ந்தால், சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற வருத்தமும் இந்திய ரசிகர்களுக்கு உள்ளது.
முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் பும்ரா இடம்பெறவில்லை என்பதால் தான், டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டார்.
February 07, 2025 11:28 AM IST


