Last Updated:
மேற்குவங்கத்தில் உணவு தேடி வந்த யானையை பொதுமக்கள் துன்புறுத்தியதால், யானை ஜேசிபி மற்றும் கட்டடத்தை இடித்து தகர்த்தது.
மேற்குவங்கத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானையை, பொதுமக்கள் விரட்டியடித்து துன்புறுத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் துவார்ஸ் வனச்சரகத்தை சுற்றி ஜல்பைகுரி, நக்சல்பாரி, சிலிகுரி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகத்தில் உள்ள யானைகள் அவ்வப்போது உணவு தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் பர்காரியா ஆற்றின் கரையோர பகுதியில் இருந்து ஒற்றை யானை ஒன்று விளை நிலத்திற்குள் உலாவியுள்ளது. அப்பகுதியே தரிசு நிலங்களாக காட்சியளித்ததால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
தனியாக வந்த யானையை கண்டதும், காட்டுக்குள் விரட்ட உள்ளூர் மக்கள் திரண்டுள்ளனர். அப்போது, வந்திருப்பது கோவில் யானை என்ற நினைப்பில் சிறுசு முதல் பெருசு வரை அனைவரும் யானை அருகே சென்று, அதை சீண்டினர். அதிலும், ஜேசிபி ஓட்டுநர் சும்மா சென்ற யானையை, சண்டைக்கு அழைப்பது போல் வா வா என்று வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனால் பொறுமை இழந்த யானை, ஆக்ரோஷமாக ஓடி வந்து ஜேசிபி வாகனத்தை முட்டித் தூக்கியது.
மேற்கு வங்கத்தில், கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி மூலம் விரட்டியதால் கோபம்…#Elephant #JCB #Anger #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/rMBJ9Gp4eo
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 3, 2025
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், தனியாக சிக்கிய மாட்டை விரட்டுவது போன்று, யானையை துரத்தினர். மேலும், கண்காணிப்பு கோபுரம் போன்று அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கட்டடத்தின் மீது ஏறிய இளைஞர்கள், சினம் மூட்டினர். இதனால், வெகுண்டெழுந்த யானை, வாலை முறுக்கியவாறு ஓடிச் சென்று கட்டடத்தை இடித்து தூக்கியது. கான்கிரீட் கட்டடமே ஆட்டம் கண்டதால், சிலர் பொத்தென தரையில் விழுந்து தலைதெறிக்க ஓடினர். ஜேசிபி மற்றும் கட்டடத்தை இடித்து தூக்கிய யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியானதும் வனத்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஜேசிபி ஓட்டுநரை கைது செய்ததுடன், யானையை சீண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் உணவு தேடி வந்த யானையை, காட்டுக்குள் விரட்டுவதாக கூறி, அதன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் துன்புறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
February 03, 2025 7:00 PM IST


