ஹொங்கொங்கின் அடுத்த தலைவரை தேர்வுசெய்வதில் சீனா புதிய விதிகளை அறிவித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி பெய்ஜிங்கின் மூத்த அதிகாரி ஒருவர் பேசிய நேரத்தில் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களும், சட்டசபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

பட மூலாதாரம், BBC CHINESE
சட்டமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மத்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கோஷமிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஹொங்கொங் மக்கள் தங்களுடைய தலைமை நிர்வாகியை 2017ல் சுதந்திரமாக தேர்வுசெய்யலாம் என்று அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
2017ல் ஹொங்கொங்குக்கான தலைமை நிர்வாகியை தேர்வு செய்ய நடக்கவுள்ள தேர்தலில் யார் போட்டியிடலாம் என்பதற்கான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் நேற்று ஞாயிறன்று சீனா அறிவித்திருந்தது.
சீன அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு தேர்வுக் குழுவில் பாதியளவானோருக்கும் கூடுதலானவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
இந்த தேர்தலில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளனது.
தற்போதைய விதிகளின் பிரகாரம் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர் தரப்பிலிருந்து எவருமே தலைமை நிர்வாகி பதவிக்கு போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதாகவே தெரிகிறது.
ஹொங்கொங் சுதந்திர அரசியல் அலகாக உருவாக வேண்டும் என்றோ, சோஷலிஸ பாதையிலிருந்து நாடு திசை மாற வேண்டும் என்றோ விரும்புபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று சீன அதிகாரி லீ ஃபெய் கூறினார்.
ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டம் நடந்த அதேநேரம் பெய்ஜிங் ஆதரவு ஆர்வலர்கள் சிலரும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். ஹொங்கொங் மக்கள் அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு பிளவுபட்டுள்ளார்கள் என்பதை இந்த போட்டி ஆர்ப்பாட்டம் எடுத்துக்காட்டியது.
சீனாவில் ஒற்றைக்கட்சி கம்யூனிஸ ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கிலான அதிபர் சீ ஜின்பிங்குடைய கொள்கையின் அங்கமாகவே ஹொங்கொங் தொடர்பான சீனாவின் முடிவுகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம்.
முன்பு பிரிட்டிஷ் காலனியாக இருந்து சீனாவுடன் இணைக்கப்பட்டிருந்த ஹொங்கொங்கில் மட்டும்தான் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க முடியும்.
சீனாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஹொங்கொங்கில் பேச்சு சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமும் ஒப்பீட்டளவில் அதிகம்.
ஆனால் சீனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய எவரும் ஹொங்கொங்கில் தலைவராக வந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கில் சீனா தற்போது புதிய விதிகளை அறிவித்துள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

