Last Updated:
டேராடூனில் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 32 பிரிவுகளில் 450 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. பொது சிவில் சட்டம் குறித்து பேசிய மோடி, யாருக்கும் பாகுபாடு இல்லை என்றார்.
டேராடூனில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளைத் தொடங்கி வைத்த நிலையில், அனைத்து மாநில வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தேசிய விளையாட்டு போட்டியின் சின்னமான, மோலி அரங்கில் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற லேசர் கண்காட்சியும் விளையாட்டு ஆர்வலர்களை பரவசமூட்டியது.
உத்தராகண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் 32 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 450 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் என்பது, விளையாட்டுத் துறையில் உள்ளது போன்ற குழு உணர்வானது என்றும், யாருக்கும் எதிரான பாகுபாடு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய சக்தியாக மாறி வருகிறது என்றும், விளையாட்டு அதில் ஒரு பெரும் பகுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். முதலாவது உலகக் கோப்பை தொடரில் இந்திய ஹாக்கி அணிகள் வாகை சூடியதும், குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றதும், விளையாட்டு என்பது பாடத்துக்கு அப்பாற்பட்டது என்பதை காட்டுவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்திய பிரதமர், உடல் எடைப் பிரச்சினைகளைத் தவிர்க்க, எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Delhi,Delhi,Delhi
January 29, 2025 9:00 AM IST


