Last Updated:
மகா கும்பமேளாவில் 3 நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நீராடுவது போன்று வெளியான புகைப்படம் போலியானது என அவர் மறுத்துள்ளார்.
நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியின் போது, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அதற்கு நேரமும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். திருப்பதி லட்டு விவகாரத்தில் தனது கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர் அதன்பின், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இந்த நிலையில் தான் உத்தரப்பிரதேச மாநிலம் திரிவேணி சங்கமத்தில் பிரகாஷ் ராஜ் பக்தியுடன் நீராடுவது போன்ற போட்டோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கும்பமேளா நிகழ்வில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில்தான், மகா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் நீராடுவது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து ஒருவர் குறிப்பிடுகையில், “இந்து வெறுப்பாளர் பிரகாஷ் ராஜ், கடவுளை நம்பாதவர், கும்பமேளாவை அசுத்தப்படுத்தச் சென்றுள்ளார்! மாசு என்றால் என்ன என்று இப்போது எனக்குப் புரிகிறது!” என்று இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
பாலிவுட் நடிகர் பிரசாந்த் சாம்பர்கி, பிரகாஷ் ராஜின் இந்த போலியான புகைப்படத்தை பகிர்ந்து “அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அகற்றப்படும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், “புனிதமான நிகழ்வில் கூட மதவெறியர்கள் கடைசியாக போலியான செய்திகளை பரப்புகிறார்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.
ஜோக்கர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள் என்றும் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார். AI-கண்டறியும் கருவியான ஹைவ் மாடரேஷன் இந்த புகைப்படம் 99.9 சதவீதம் போலியானது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
January 30, 2025 10:14 PM IST


