“கறுப்பர்களுக்கு மட்டுமல்ல வெள்ளையர்களுக்கும் தேவையான கடையாகத்தான் என்னுடைய புத்தகக்கடை இருந்தது. ஒருமுறை கல்லூரி மாணவர்களுடன் ஒரு பேராசிரியர் எங்கள் கடைக்கு வந்தார். அனைவரும் வெள்ளையர்கள். கடைக்குப் பின்புறமுள்ள நூலக அறைக்கு அவர்களை அழைத்துச் சென்று உரையாடினேன்.
“வெள்ளையர்களான நீங்கள் எல்லோரும் எங்களை, கெட்டோ என்றழைக்கப்படக் கூடிய சேரியில் எறிந்து விட்டு கறுப்பர்களை ஒதுக்கி வைத்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, உங்களை விட்டும் தூரமாக எங்களை வாழச் செய்துவிட்டதாக நம்பிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், நாங்கள் அனைத்து நகரங்களைச் சுற்றிலும் இப்போது விரவி வசித்து வருகிறோம். இது எப்படியிருக்கிறது என்றால், கோட்டை ஒன்றில் வசிப்பவர் சில எலும்புகளையும் ரொட்டித் துண்டுகளையும் ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டு, அதனை விட்டும் தூர இருப்பதாக நம்புகிறார். ஆனால், அந்த எலும்புகளும், ரொட்டித் துண்டுகளும் கரப்பான்பூச்சி வடிவில் இப்போது கோட்டைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை துன்பப்படுத்துகிறது. நாங்கள் சேரியிலேயே இருப்போம் என நினைத்தீர்கள், ஆனால் இப்போது எல்லாப் பகுதிகளிலும் வசிக்கிறோம்.”
“சேரியில் வசிக்கும் கறுப்பர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர்கள் என்னுடைய கடைக்கு வந்திருந்தனர். கறுப்பர்களைப் பற்றிய வெள்ளையர்களின் உளவியலை அப்பட்டமாக போட்டு உடைக்கவும், அவர்கள் கூனிக் குறுகி நின்றனர். கறுப்பர்களின் அவல வாழ்க்கையை அவர்களிடம் உணர்வுப் பூர்வமாக விளக்கினேன்.
“நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” வெள்ளை மாணவர்கள் உண்மையான அக்கறையோடு வினவினர்.
“எப்போதுமே இந்தக் கேள்வியை வெள்ளையர்களிடமிருந்து எதிர் கொண்டிருக்கிறேன். நீங்கள் கெட்டோவுக்கு உதவ விரும்புகிறீர்களா? வீட்டிற்குச் சென்று உங்களுடைய ஆடம்பரமான ஆடைகளைக் களைந்து, ஒரு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் இறங்கி, கறுப்பர்களின் வீடுகளைச் சுத்தம் செய்ய அவர்களுக்கு உதவி, நீங்கள் நேர்மையானவர் என்பதை நிரூபியுங்கள்;

