Last Updated:
சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இதற்கான காரணத்தை கேட்டால் உங்களுக்கு கசப்பான அனுபவமே கிடைக்கும். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பைஃபெஞ்சியா(Yaan Bifengxia) என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா, முடக்கு வாதம், சுளுக்கு மற்றும் தசை வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் என்று கூறி, புலி சிறுநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.
இந்த வினோதமான பரிகாரம் சீனாவின் பத்திரிக்கை செய்திகளால் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த ஒரு பார்வையாளர், இங்கு விற்பனை செய்யப்படும் சிறுநீர் தயாரிப்புகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோது சர்ச்சை ஆரம்பமானது. இந்த உயிரியல் பூங்காவில் 250 கிராம் அளவுள்ள சைபீரியன் புலியின் சிறுநீர் பாட்டில்கள் 50 யுவானுக்கு (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.596) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புலியின் சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இஞ்சித் துண்டுகளுடன் சேர்த்து தடவுமாறு இந்தப் பாட்டிலின் லேபிளில் பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் திடுக்கிடும் விஷயம் என்னவென்றால், இந்த சிறுநீரை வாய் வழியாக உட்கொள்ளலாம் என்றும், ஒருவேளை ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்பட்டால் பருகுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் உயிரியல் பூங்கா அறிவுறித்தியுள்ளது.
வழக்கமாக உயிரியல் பூங்காவில் உள்ள புலிகள் சிறுநீர் கழிப்பதை, அதற்கென்றே வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் சேகரிக்கப்படுவதாக இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த சிறுநீரில் ஏதேனும் கிருமி நீக்கம் செய்யப்பட்டதா? என்பது தெளிவாக தெரியவில்லை. மருத்துவ வல்லுநர்கள் புலியின் சிறுநீரில் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக உயிரியல் பூங்கா கூறுவதை மருத்துவர்கள் கடுமையாக மறுத்துள்ளனர். இதற்கிடையில், ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், பாரம்பரிய சீன மருத்துவத்தில் புலியின் சிறுநீர் மருந்தாக அங்கீகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆதாரம் இல்லாமல் புலியினுடைய சிறுநீர் மதிப்பை மிகைப்படுத்துவது பாரம்பரிய சீன மருத்துவத்தை சிதைப்பது மட்டுமல்லாமல் புலியின் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் தீங்கு விளைவிக்கும்” என்று சீனப் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு உயிரியல் பூங்காவிற்கு என்ன தகுதியுள்ளது என இன்னொரு மருத்துவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் உயிரியல் பூங்கா தங்களிடம் புலியின் சிறுநீரை விற்பனை செய்வதற்கான சரியான வணிக உரிமம் இருக்கிறது என்று கூறினாலும், இது பொதுமக்களின் கோபத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.
சீன கலாச்சாரத்தில் புலிகள் வலிமையின் அடையாளங்களாக இருக்கின்றன. மேலும் பழைய மருத்துவ நூல்கள் கால்-கை வலிப்பு மற்றும் வாத நோய் போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க புலி எலும்புகளைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும், ஆபத்தான நிலையில் இருக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் இத்தகைய நடைமுறைகளை சட்டவிரோதமாக்கியுள்ளது. மீறுபவர்கள் புலிகளை வேட்டையாடியதற்காக கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
January 29, 2025 3:55 PM IST


