
தெலங்கானா மாநிலம் மேட்சல் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. அவர் தனது மனைவி மாதவியை அடித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்கள் கரையும் வகையில் குக்கரில் வேகவைத்து, பின்னர் அதனை எடுத்துச் சென்று ஏரியில் வீசினார். இந்த வழக்கு தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு பற்றி ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ”குற்றம் சாட்டப்பட்ட குருமூர்த்தி, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து அதன் பின் விருப்ப ஓய்வு வாங்கியிருக்கிறார். ஓய்வுக்குப் பின் ஐதராபாத்தில் குடியேறி மேட்சலைச் சேர்ந்த வெங்கட மாதவியை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் ஜில்லாலகூடாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு பேருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. எனவே மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார் குருமூர்த்தி.
தன்னுடைய கொலை திட்டத்திற்கு சங்கராந்தி பண்டிகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட குருமூர்த்தி, மனைவி, குழந்தைகள் ஆகியோரை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன்னுடைய திட்டத்தின் அடிப்படையில் பிள்ளைகள் இரண்டு பேரையும் உறவினர் வீட்டில் தங்கச் செய்த குருமூர்த்தி, மனைவி மாதவியுடன் கடந்த 15-ஆம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். 16-ஆம் தேதி காலை 10 மணி அளவில் கணவன் மனைவி இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு சண்டையாக மாறியது.
அப்போது மாதவியின் தலைமுடியைப் பிடித்து தலையை சுவற்றில் மிகவும் பலமாக மோதச் செய்திருக்கிறார் குருமூர்த்தி. இதனால் மயங்கி விழுந்த மாதவி உடல் மீது ஏறி அமர்ந்த குருமூர்த்தி, கழுத்தை நெறித்து மூச்சு திணறச் செய்து மாதவியை கொலை செய்துள்ளார். இறந்து போன மாதவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்துவது எப்படி என்று ஆலோசித்த குருமூர்த்தி, வீட்டில் இருந்த பெரிய கத்தியைப் பயன்படுத்தி முதலில் கால், கைகள், தலை என்று மனைவியின் உடல்பாகங்களை தனித்தனியாக துண்டு துண்டாக வெட்டி, அவற்றை வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார்.
நீண்ட ஆலோசனைக்குப் பின் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெந்நீர் காய வைக்கப் பயன்படுத்தும் ஹீட்டரைப் பயன்படுத்தி, உடல் பாகங்களை நன்றாக கரையும் வரை வேக வைத்துள்ளார். அதன் பிறகு வெந்து கரைந்த உடல் பாகங்கள் அனைத்தையும் 10 லிட்டர் பெயிண்ட் வாளியில் ஊற்றி, இருட்டிய பின் ஜல்லலகூடா ஏரிக்குக் கொண்டு சென்று அதில் கரைத்துள்ளார். கரையாத எலும்பு துண்டுகளையும் அதே ஏரியில் வீசியிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வந்து துர்நாற்றம் வெளியே வராத வகையில் 4 மணி நேரம் வீட்டைச் சுத்தம் செய்து, ரூம் ஸ்ப்ரே அடித்துள்ளார் குருமூர்த்தி.
17-ஆம் தேதி காலை உறவினர் வீட்டில் இருந்து குழந்தைகளை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, குழந்தைகள் ‘அம்மா எங்கே’ என்று கேட்ட போது, ‘அவர் வெளியே சென்று இருப்பதாக’ அவர்களிடம் கூறி இருக்கிறார். மனைவியை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட படுக்கை அறையைப் பூட்டி வைத்த குருமூர்த்தி, குழந்தைகள் அங்கு செல்லாமல் தடுத்து, இரண்டு நாட்கள் தாய் வெளியில் சென்று இருப்பதாக குழந்தைகளை நம்ப வைத்துள்ளார். இந்த நிலையில் மாதவியிடமிருந்து ஃபோன் அழைப்புகள் ஏதும் வராததால், குருமூர்த்தியை செல்போன் மூலம் மாதவியின் பெற்றோர் தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது ‘மாதவி எங்கே’ என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக குருமூர்த்தி பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாதவியின் பெற்றோர் நேராகப் புறப்பட்டு மகள் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடம் ‘மாதவி வெளியே செல்வதாகக் கூறிச் சென்றார். மனைவியை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று கூறி அவர்களை நம்ப வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாதவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறியதைத் தொடர்ந்து, குருமூர்த்தி, மாதவியின் பெற்றோர்களுடன் சென்று மீர்பேட் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுப்பது போல் நடித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாதவியைத் தேடத் துவங்கியதும், போலீசாரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் குருமூர்த்தி செயல்பட்டது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய போது, மனைவியைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி வேக வைத்து ஏரியில் கரைத்ததை ஒப்புக்கொண்டார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், ப்ளூ ரே டெக்னாலஜியைப் பயன்படுத்தியும் தடயங்களைச் சேகரித்து, குருமூர்த்தி மனைவியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ததை உறுதிப்படுத்தி, ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம்” என்று காவல் ஆணையர் சுதீர் பாபு கூறினார்.
காவல் ஆணையர் சுதீர் பாபு மேலும் பேசுகையில், ”இந்தக் கொலை வழக்கின் விசாரணையின்போதுதான், ஒரு மனிதனுக்குள் இவ்வளவு பெரிய கொடூர மிருகம் மறைந்து இருந்தது என்பது எங்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குருமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்திருக்கிறோம். வழக்கு விசாரணையின் போது தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
January 29, 2025 11:39 AM IST
மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த சம்பவம்.. சினிமாவை விஞ்சிய கணவனின் குரூரம்.. நடந்தது என்ன?

