கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடோலின் உள்ளரங்கில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பு விழா, இந்திய நேரப்படி, நேற்றிரவு 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டன் விழாக் கோலம் பூண்டது. வெள்ளை மாளிகை மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னியது. பாரம்பரிய முறைப்படி, வெள்ளை மாளிகைக்கு வந்த டிரம்பை-யும், அவரது மனைவி மெலேனியாவையும், அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், கேபிடோல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.
கடும் குளிர் காணமாக, 45 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா உள்ளரங்கில் நடைபெற்றது. இதன்படி, பதவியேற்பு விழா நடைபெற்ற கேபிடோலில் Rotunda பகுதிக்கு டொனால்டு டிரம்ப், துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்ட ஜே.டி.வேன்ஸ் உள்ளிட்டோர் வந்தனர். இசைக் கருவிகள் முழங்க உலகமே உற்று நோக்கிய பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
துணை அதிபர் பதவியேற்பு
முதலில், துணை அதிபராக ஜேடி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி Brett Kavanaugh பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
டிரம்ப் பதவியேற்பு
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பீரங்கி குண்டுகள் முழங்கச் செய்யப்பட்டன. பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
Also Read: அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. முகேஷ் அம்பானி அவரது மனைவியுடன் நேரில் வாழ்த்து!
பிரதமர் மோடி வாழ்த்து
அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்புக்கு, துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரீஸ் உள்ளிடோர் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளின்டன் அவரது மனைவி ஹிலாரி கிளின்டன், ஜார்ஜ் புஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைசர் ஜெய் சங்கர் பங்கேற்றார். அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக் கடிதத்தை டொனால்டு டிரம்பிடம் வழங்கினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை, இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், மெடா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா முடிவடைந்ததும், பாரம்பரிய முறைப்படி, ஜோ பைடனையும், அவரது மனைவி ஜில் பைடனையும் ஹெலிகாப்டர் மூலம் டிரம்ப் வழியனுப்பி வைத்தார். மேலும், டிரம்ப்புக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
January 21, 2025 6:20 AM IST

