
இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின் சுமை பெருமளவு குறையும். அத்துடன், பயன்படுத்திய மின்சாரம் போக, மீதியிருக்கும் மின்சாரத்தை விற்பனை செய்து பலனடைய அரசு வழிவகை செய்தது. மேலும், பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு மானியமும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், ரூஃப்டாப் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கு மத்திய அமைச்சகம் மேலும் இரண்டு கட்டண முறைகளை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, இது பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ் ரூஃப்டாப் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கு மேலும் இரண்டு கட்டண முறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவை நிறுவனம் (RESCO) மற்றும் அதை சார்ந்த ஒருங்கிணைப்புகளின் மூலம் பணம் செலுத்தும் பட்சத்தில் வீடுகளுக்கு மானியம் வழங்குவதோடு, கட்டண பாதுகாப்பையும் நிறுவனம் உறுதி செய்கிறது.
இது குறித்த திட்ட வழிகாட்டுதல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம் அதில் கூறியிருப்பதாவது, இந்தத் திட்டத்தின் கீழ், குடியிருப்புகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவை நிறுவனத்தின் அடிப்படையிலான கிரிட்-இணைக்கப்பட்ட ரூஃப்டாப் சூரிய மின்சக்தி மாதிரிகளில் அபாயமற்ற முதலீடுகளை செய்வதற்காக கட்டண பாதுகாப்பு செயல்முறைக்காக (PSM) ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதலுக்குப் பிறகு, இது பிற மானியங்கள், நிதிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் கூடுதலாக வழங்கப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் ரூஃப்டாப் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதற்கு முதலீடு செய்கின்றன. இதனால் நுகர்வோர் முன்கூட்டியே எந்த செலவும் செய்யாமல், பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும். இந்த மாதிரியின் கீழ், மின்சார விநியோக நிறுவனங்கள் அல்லது மாநிலங்களின் மூலம் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் தனிப்பட்ட வீடுகளின் சார்பாக ரூஃப்டாப் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுகின்றன.
இந்த வழிகாட்டுதல்கள், தேசிய போர்டல் மூலம் நுகர்வோர் மேற்கொள்ளும் தற்போதைய செயல்படுத்தல் முறைக்கு (கேபெக்ஸ் முறை) கூடுதல் வலுசேர்க்கும் என்றும், இந்த மாற்று மாதிரிகள் தேசிய போர்டல் அடிப்படையிலான திட்டத்தின் செயல்படுத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சகம் மேலும் தெளிவுப்படுத்தி உள்ளது.
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா:
கடந்த ஆண்டு பிப்ரவரியில், மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனாவுக்கு (PM-SGMBY) ஒப்புதல் அளித்தது. மேலும், அதற்காக ரூ.75,021 கோடி பட்ஜெட்டையும் ஒதுக்கியது. இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளில் ரூஃப்டாப் சூரிய மின் சக்தியை நிறுவுவதும், மாதத்திற்கு 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். பிப்ரவரி 13, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இந்தத் திட்டத்தில், சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நிதி உதவியும் வழங்குவதாக அறிவித்தது.
இதையும் படிக்க: Budget 2025 Update : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு..
சூரியசக்தி மானியம்:
வீடுகள் ரூஃப்டாப் சூரிய மின்சக்தி அமைப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா (PM-SGMBY) திட்டத்தின்கீழ், மத்திய அரசு நிதி உதவியையும் வழங்கி வருகிறது. இவ்வாறாக, சூரிய மின்சக்தியை நிறுவும் பட்சத்தில் மின்சாரக் கட்டணங்களில் குறிப்பிடத்தக்க சேமிப்பைப் பெற முடியும். மேலும், உபரி மின்சாரத்தை டிஸ்காம்களுக்கு (DISCOM) விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் பெற முடியும்.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் 30 GW சூரிய மின் திறனைச் சேர்க்கும். இது 25 ஆண்டுகளில் 720 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வைக் குறைக்கும். இந்த திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் பின்வருமாறு,
- 1 kW அமைப்புக்கு ரூ.30,000
- 2 kW அமைப்புக்கு ரூ.60,000
- 3 kW அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு ரூ.78,000 வரையிலான மானியத் தொகை வழங்கப்படுகிறது.
கூடுதலாக, கிராமப்புறங்களில் ரூஃப்டாப் சூரிய மின்சக்தி திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி சூரிய மின் கிராமம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 8ஆவது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?
திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூஃப்டாப்புடன் கூடிய வீடு உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் பலனடைய முடியும்.
பதிவு செய்தல்: தேசிய ரூஃப்டாப் சூரிய மின்சக்தி போர்ட்டலான pmsuryaghar.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் பதிவு செய்ய வேண்டும்.
விற்பனையாளரை தேர்வு செய்தல்: பின்னர், அந்த இணையதளத்தில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு விற்பனையாளரை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த விற்பனையாளர்கள் ஏற்கனவே உள்ளூர் டிஸ்காம்களில் (DISCOM) பதிவு செய்யப்பட்டிருப்பார்கள். இந்த செயல்முறையை மேலும் எளிதாக்க ஒரு தேசிய விற்பனையாளர் பதிவேடு பின்னர் அறிமுகப்படுத்தப்படலாம்.
திட்டத்தில் சேர தகுதி:
- சரியான மின்சார இணைப்பு தேவை.
- உங்கள் வீடு இதற்கு முன்பு சூரிய மின்சக்தி நிறுவல்களுக்கான மானியத்தைப் பெற்றிருக்கக் கூடாது.
இதையும் படிக்க: Har Ghar Lakhpati: சீக்கிரமா லட்சாதிபதியாக SBI தரும் சான்ஸ் இதுதான்…! தவறாம யூஸ் பண்ணிக்கோங்க…
இந்தத் திட்டம் உற்பத்தி, தளவாடங்கள், நிறுவல், செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் போன்ற துறைகளில் 17 லட்சம் வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, இந்தியாவின் பசுமை எரிசக்தியையும் ஊக்குவிக்கிறது.
January 18, 2025 8:09 AM IST

