அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சந்தைக்கு சீனி மற்றும் அரிசி வாங்க வந்த வாடிக்கையாளர்களும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில், சீனி கிலோகிராம் ஒன்றுக்கான விசேட சரக்கு வரியை 50 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரி உயர்வால், பல வியாபாரிகள் சீனி விலையை உயர்த்தியதால், அதை கட்டுப்படுத்த அதிகபட்ச சில்லரை விலையை அரசாங்கம் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதாவது ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாயாகவும், ஒரு கிலோ பிரவுன் சீனி 330 ரூபாயாகவும் உள்ளது.
புறக்கோட்டை மொத்த வியாபாரிகளிடம் தற்போதுள்ள சீனி தட்டுப்பாடு குறித்து கேட்டபோது, தங்களுக்கு சீனி கையிருப்பு விற்பனைக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், சந்தைக்கு சீனி வாங்க வந்த வாடிக்கையாளர்களும் சிரமத்துக்குள்ளாகினர். சந்தையில் சீனிதட்டுப்பாடு மட்டுமின்றி சம்பா, கீரி சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சந்தைக்கு அரிசி வாங்க வந்த பல வாடிக்கையாளர்கள் அரிசி இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் சீனி மற்றும் அரிசி விற்பனை செய்பவர்களை கண்டறியும் சோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

