
Last Updated:
பெண் ஒருவரை இளைஞர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டியதை, அங்கிருந்த கூட்டத்தினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அவலம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஐடி பெண் ஊழியரை, உடன் பணியாற்றிய இளைஞர் ஒருவர், கம்பெனி வளாகத்திலேயே கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சியை போன்று, ஒரு கொடூரம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் நிறுவனத்தில், பெண் ஒருவரை இளைஞர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டியதை, அங்கிருந்த கூட்டத்தினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அவலம் நிகழ்ந்துள்ளது. கூட்டத்தில் யாரேனும் ஒருவர் தடுக்க முன் வந்திருந்தால் கூட, இளம்பெண்ணின் உயிர் பறிபோயிருக்காது. மனிதம் மரித்துப் போனதில் நடந்தது என்ன?
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள எரவாடா பகுதியில் ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனமான இதில், நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் நிறுவனத்தின் வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு, 28 வயதான சுபதா சங்கர் என்பவர் வந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அதை சுற்றியிருந்து ஏராளமானோர் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.
தன்னை யாரும் தடுக்க வரமாட்டார்கள் என்ற ஆணவத்தில், அந்த இளைஞர் தொடர்ந்து சுபதாவை வெட்டியுள்ளார். சிறிது நேரம் கத்தியுடன் இளைஞர் உலாவிய போதும், அங்கிருந்த யாரும் அவரிடம் நெருங்கவில்லை. தனது கையில் வைத்திருந்த கத்தியை கீழே போட்டதும், கூடியிருந்த இளைஞர்கள் ரவுண்டு கட்டி அந்த நபரை நையப்புடைத்தனர். உடனே படுகாயமடைந்த சுபதாவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதில் அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால், அவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 30 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர். அவர், கொலை செய்யப்பட்ட சுபதாவுடன் பணியாற்றிய கிருஷ்ண சத்யநாராயணன் என்பது தெரியவந்தது. இளம்பெண் சுபதா, கிருஷ்ணாவிடம் பணம் வாங்கியுள்ளார். இது தொடர்பான கொடுங்கல் வாங்கல் பிரச்சனையில் இருவருக்கும் இடையே அலுவலகத்திற்கு உள்ளேயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணா, கம்பெனி வளாகத்திற்குள் வைத்தே சுபதா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஐடி பெண் ஊழியரை, உடன் பணியாற்றிய இளைஞர் ஒருவர், கம்பெனி வளாகத்திலேயே கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai,Maharashtra
January 10, 2025 5:04 PM IST

