
Last Updated:
இயற்கை பேரழிவுகள் அல்லது உள்ளூர் நிலப்பிரபுக்களுடன் ஏற்பட்ட மோதலால் கிராமத்தினர் வெளியேறி இருக்கலாம் என இன்னும் சிலர் நம்புகின்றனர்.
பொன்னிற மணல் பரப்புகள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது குல்தாரா கிராமம். பழங்காலத்தின் எச்சமாக தனித்திருக்கும் இந்த கிராமம், மர்மம் மற்றும் வெளியே அதிகம் தெரியாத பல கதைகள் நிறைந்த ஒன்றாகும். இந்த கிராமம், ஒரு பேய்களின் நகரமாக உள்ளதாக கூறப்படுகிறது. புழுதி வீசும் காற்று மற்றும் சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்களின் காலடிச் சுவடுகளால் மட்டுமே இந்த கிராமத்தின் அமைதி உடைக்கப்படுகிறது.
குல்தாராவின் கதையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் 1291-ம் ஆண்டுக்கு செல்ல வேண்டும். ஜெய்சால்மர் மாநிலத்தின் கீழ் உள்ள இந்தக் கிராமம், 1825-ம் ஆண்டு வரை பல நூற்றாண்டுகளாக செல்வச் செழிப்பில் செழித்துக்கொண்டிருந்தது. ஆனால் ஒரே இரவில் எல்லாம் மாறிப்போனது. வீடுகள், கோயில்கள் மற்றும் கிணறுகளை அப்படியே காலியாக விட்டுவிட்டு, இனிமேல் இங்கு திரும்பவும் வரவே கூடாது என்று ஒரே இரவில் முழு கிராமமும் காணாமல் போனது.
ஒட்டுமொத்த கிராமத்தினரும் திடீரென வெளியேறுவதற்கு என்ன கரணமாக இருக்க முடியும்?. உண்மையில் யாருக்கும் தெரியாது. ஆனால் இதைப் பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் உண்மையில் இதைச் சுற்றியுள்ள மர்மத்தை தீர்க்கவில்லை. மக்களை கொடுமைப்படுத்துவதில் பெயர்போன சலீம் சிங் என்ற அடக்குமுறை அமைச்சர், கிராமத் தலைவரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டுள்ளார். அவரது கொடுங்கோன்மையை எதிர்க்கும் முயற்சியாக, கிராமவாசிகள் அனைவரும் ஒரு அசாதாரண நடவடிக்கையை மேற்கொண்டனர். அது ஒரே இரவில் தங்கள் வீடுகளை கைவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவது.
இங்கிருந்து புறப்படுவதற்கு முன், “இனி யாரும் இங்கு வாழ மாட்டார்கள்” என அவர்கள் இந்த நிலத்தை சபித்ததாகக் கூறப்படுகிறது. இயற்கை பேரழிவுகள் அல்லது உள்ளூர் நிலப்பிரபுக்களுடன் ஏற்பட்ட மோதலால் கிராமத்தினர் வெளியேறி இருக்கலாம் என இன்னும் சிலர் நம்புகின்றனர். காலப்போக்கில், குல்தாரா பாழடைந்தது. உள்ளூர்வாசிகள் இங்குள்ள பேய்கள் மற்றும் சபிக்கப்பட்ட இடங்களைப் பற்றி பேசியதன் காரணமாக, இந்தியாவில் மிகவும் பேய்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாக இந்தக் கிராமம் மாறிப்போனது. தற்போது, குல்தாராவின் பயமுறுத்தும் நிலப்பரப்புகள் மற்றும் மர்மமான கடந்த காலத்தை அனுபவிக்க பலர் இங்கு வருகை தருகின்றனர்.
ஆனால் குல்தாரா கிராமத்தை இரவு தழுவும்போது, ஒட்டுமொத்த ஆள் அரவமின்றி மயானம் போல் காட்சியளிக்கிறது. ஏனென்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரும் இங்கு தங்க அனுமதிக்கப்படுவதில்லை. பலிவால் பிராமணர்களின் ஆவிகள் இன்னும் தங்கள் பூர்வீக நிலத்தைக் காத்து வருவதாக பலர் இன்னும் நம்புகிறார்கள்.
2015-ம் ஆண்டில், ராஜஸ்தான் அரசாங்கம் குல்தாராவின் பேய் மரபை ஏற்றுக்கொண்டு, அதை ஒரு சுற்றுலா தலமாக மாற்றியது. இருப்பினும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் அதே வேளையில், குல்தாரா இன்னும் அதன் மர்மத்தை தன்னகத்தே ஒளித்து வைத்துள்ளது. அது தைரியம், எதிர்ப்பு மற்றும் திடீரென்று நிறுத்தப்பட்ட வாழ்க்கை எதிரொலிகளின் அமைதியான கதை ஆகும்.
January 02, 2025 3:24 PM IST

