நமது நிருபர்
உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளை நடத்துவதற்காக கணினி சார்ந்த தேர்வு மையங்களை அமைக்க மாநில அரசுகள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இது தொடர்பாக கோயம்புத்தூர் திமுக உறுப்பினர் ராஜ்குமார் கணபதி “யுஜிசி / யுபிஎஸ்சி, மாநில வாரியாக தேசிய தேர்வுகளை நடத்துவதற்காக கணினி ஆய்வகங்களை அமைக்க அரசிடம் ஏதேனும் முன்மொழிவு / திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்களவையில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் எழுத்துபூர்வமாக திங்கள்கிழமை அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான ஒரு சிறப்பு அமைப்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2018-இல் தொடங்கப்பட்டதில் இருந்து, 5.4 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களை உள்ளடக்கிய 240 தேர்வுகளை நடத்தியுள்ளது.
தேர்வுகள் பேனா மற்றும் காகிதத் தேர்வு (பிபிடி) மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வு (சிபிடி) ஆகிய இரண்டு முறையிலும் நடத்தப்பட்டுள்ளன. என்டிஏ மூலம் தேர்வுகளை நடத்துவதற்கான சிபிடி மையங்கள் முதன்மையாக தேர்வு டெலிவரி ஏஜென்சியால் வழங்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நகரத்தில் கணினி இணைப்பு முனைகள் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், முடிந்தவரை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏஐசிடிஇ உடன் இணைந்த நிறுவனங்கள் தேர்வுகளை நடத்துவதற்கு தங்கள் வளாகத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாநில அரசில் பாதுகாப்பான கணினி அடிப்படையிலான தேர்வு (சிபிடி) மையங்களை அமைப்பதில் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆதரவு அளிக்குமாறு கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அமைச்சர்.
கூட்டுறவுத் துறையில் செயல்திறன் விருதுகள்: இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் செயல்திறன் விருதுகள் வழங்கப்படுவது தொடர்பாக ராஜ்குமார் கணபதி எம்.பி. எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு மக்களவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்திருப்பதாவது:
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தேசிய கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்) அளித்துள்ள தகவலின்படி, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அவற்றின் தொழில்நுட்ப செயல்திறனில் மேம்பாட்டுக்காகவும் ஆலைகள் உறுப்பினர்களில் ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்க்கும் வகையிலும் கூட்டமைப்பானது அதன் வெள்ளிவிழா ஆண்டில் (1985) தொழில்நுட்ப செயல்திறன் விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

