சீனாவில் சானிட்டரி நாப்கின் பேட்ஸ் தரத்தில் நிகழ்ந்த மோசடி அந்நாட்டுப் பெண்ணியவாதிகளை பெரும் போராட்டத்தைக் கையிலெடுக்க தூண்டியுள்ளது. இந்த சர்ச்சை கடந்த நவம்பர் முதல் பாதியில் உருவானது. பிரபல ப்ராண்ட் ஒன்று தான் விற்பனை செய்த சானிட்டரி பேட்ஸ்களின் நீளம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக முதல் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தச் சர்ச்சை எழுந்த சில நாட்களுக்குப் பின்னர் வாடிக்கையாளர்கள் சிலர் சானிட்டரி பேட்களின் pH அளவானது திரைச்சீலை, டேபிள் விரிப்புகளில் இருக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், அதனால் அந்தப் பேட்களை பயன்படுத்துவோருக்கும் அரிப்பு, எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் கூறினர்.
ஆனால், நுகர்வோரின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து சானிட்டரி பேட் நிறுவனமான ஏபிசி நிறுவனம் மெத்தனமான பதில்களைத் தெரிவித்தது அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது. ஏபிசி நிறுவனம், “உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் வேறு பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்” என்று அகங்கார தொனியில் பதிலளித்தது.

