வெப்பமண்டலக் காடுகளின் பசுமைப் போர்வையால்போர்த்தப்பட்ட சுரினாம், தென் அமெரிக்காவின் வடக்குக்கரையோரத்தில் அமைந்திருக்கும் ஒரு இயற்கை வளமிக்க சிறிய நாடாகும்.
முன்னொரு காலத்தில் நெதர்லாந்து கயானா அல்லது டச்சுகயானா என அழைக்கப்பட்ட இந்நாடு, கிழக்கே பிரெஞ்சுகயானாவையும், மேற்கே கயானாவையும், தெற்கேபிரேசிலையும், வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலையும்எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது. தென்அமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறிய நாடாக இருந்தாலும், இயற்கை வளங்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது.
இயற்கையின் கருவூலமாகத் திகழும் இந்நாட்டில், தங்கம்முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகிறது. அலுமினியம் உற்பத்திக்கு இன்றியமையாத பொக்சைட்கனிமம், குரோமியம், களிமண், தாமிரம், வைரம், இரும்புத்தாது, மாங்கனீஸ், நிக்கல், பிளாட்டினம், தகரம் எனபல்வேறு கனிம வளங்கள் நிறைந்துள்ளன.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் எண்ணெய்வளங்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு நம்பிக்கைஊட்டுவதாக அமைந்திருந்தன. நாட்டின் 93 சதவீதநிலப்பரப்பு அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளால்சூழப்பட்டுள்ளது.
ஆனால் இன்று, இந்த வளம் கொழிக்கும் நாடு சீனாவின்கடன் வலையில் சிக்கி, பெரும் பொருளாதாரநெருக்கடியில் தவித்து வருகிறது. சீனாவின் எக்சிம்வங்கியிடமிருந்து பெற்ற கடனுக்கான கனத்த வட்டியைச்செலுத்த முடியாமல் போராடி வருகிறது. இலங்கை சந்தித்தபேரவலத்தைப் போலவே, இந்நாடும் கடுமையானபொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு ள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், சீனா தன் கண்களை சுரினாமின்வளங்கள் மீது பதித்தது. வீதிகள், பாலங்கள், துறைமுகங்கள் என பெரிய உள்கட்டமைப்புத்திட்டங்களுக்காக பெருந்தொகை கடன்களை வாரிவழங்கியது.
சுரினாமின் இதயமாக கருதப்படும் தங்கம், பொக்சைட் சுரங்கங்களில் நேரடி முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
அது மட்டுமல்லாமல், கடல்சார் எண்ணெய்வளங்களிலும் சீன நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாட்டின்பொருளாதாரத்தை மேலும் பின்னடைவுக்குத் தள்ளியது. இன்று, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்கணிசமான பகுதி சீனாவுக்கான கடனைத் திருப்பிச்செலுத்துவதிலேயே செலவிடுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கதவைத் தட்டும் நிலைக்குசுரினாம் நாடு இன்று தள்ளப்பட்டுள்ளது. கடன்மறுசீரமைப்புக்கு சீனா மௌனம் காக்கும் நிலையில், மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இது சீனாவின் ‘கடன் பொறி இராஜதந்திரத்தின்’ மற்றொருவெற்றிக்கதையாகும். அமெரிக்கக் கண்டத்தின்பெரும்பாலான நாடுகளுடன் வர்த்தகக் கூட்டாண்மையைஉருவாக்கி, தனது பொருளாதார, வர்த்தக மற்றும் எரிசக்திநலன்களை முன்னிறுத்தி உலகளாவிய மூலோபாயத்திட்டத்தை முன்னெடுத்து வரும் சீனா, பல நாடுகளைஇத்தகைய பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்துவருகிறது.
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, சீனாவின்கடன் தொகை மற்றும் நிபந்தனைகள் குறித்த அதிகரகசியத்தன்மை காரணமாக, மற்ற கடன் வழங்குநர்களால்பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ முடியாத நிலைஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் இரக்கமற்ற கடன்வழங்குநரான சீனாவிடமிருந்து பெற்ற நூற்றுக்கணக்கானபில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களால், பன்னிரண்டுஏழை நாடுகள் பொருளாதார நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன.
அர்ஜென்டினாவின் CEMA பல்கலைக்கழகத்தின்நிதித்துறை பேராசிரியர் டயானா மொண்டினோகுறிப்பிடுவது போல, 2017ல் உலக வங்கி மற்றும் சர்வதேசநாணய நிதியத்தை மிஞ்சி, சீனா உலகின் மிகப்பெரியகடன் வழங்குநராக மாறியுள்ளது.
‘ஒரு பட்டி ஒரு பாதை’ முன்முயற்சித் திட்டத்தின் கீழ்உலகெங்கிலும் உள்ள நாடுகள் சீனாவின் கடன் வலையில்சிக்குகின்றன.
சுரினாமின் இன்றைய நிலை, சீனாவின் கடன் பொறிஇராஜதந்திரம் எவ்வாறு சிறிய வளமிக்க நாடுகளைப்பாதிக்கிறது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவிளங்குகிறது.
இயற்கை வளங்கள் நிறைந்த இந்நாடு, தனது வளங்களைமுறையாகப் பயன்படுத்தி, நிதிச் சுதந்திரத்தைப்பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவும், நிதிமேலாண்மையில் சீர்திருத்தங்களும்இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமாகிறது.
ஆதவன்
The post சீனாவின் கடனில் சிக்கித் தவிக்கும் சுரினாம் நாடு appeared first on Thinakaran.
