கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி வீரர்களுக்கான மெகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு உலகம் முழுவதும் இருந்தும் 1574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் நிர்வாக கமிட்டி மொத்தம் 574 வீரர்களை தேர்வு செய்துள்ளது.
இவர்களில் 366 பேர் இந்தியாவையும் மற்ற 208 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். இந்த மெகா எலத்தின் போது ஒட்டுமொத்தமாக 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 70 வீரர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
இந்த ஏலத்தில் 5 அன்கேப்டு வீரர்கள் அணிகளின் கவனத்தை பெற்று அதிக தொகைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் பின்வருமாறு-
1)வைபவ் அரோரா
2024 இல் கொல்கத்தா அணி பட்டத்தை வெல்ல உதவிய முக்கிய வீரர்களில் ஒருவர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் வேகம் மற்றும் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் வழங்கும் ஒரு பவர்பிளே பந்துவீச்சாளராக வைபவ் அரோரா மாறியுள்ளார். ஏலத்தின்போது இவருக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2)அசுதோஷ் சர்மா
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அசுதோஷ் சர்மா தனது பவர் ஹிட்டிங் மற்றும் ஃபினிஷிங் திறமைகளால் கவனம் ஈர்த்தார். 167 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள 26 வயதான இவர், நிச்சயமாக அணி உரிமையாளர்களின் கவனத்தை பெறுவார்.
3)அங்கிரிஷ் ரகுவன்ஷி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. இவர் அடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலாக வருவார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. டாப் ஆர்டரில் கலக்கிய ரகுவன்ஷி பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
4)ராசிக் சலாம் தார்
டெல்லி அணியில் இடம்பெற்ற இவர் 4 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்தார். இவருக்கு ஏலத்தின்போது டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5)அபினவ் மனோகர்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்டரான அபினவ், அணியால் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மிடில் ஆர்டரில் இறங்கி விரைவாக ரன் குவிக்கும் இவரை ஐபிஎல் அணிகள் வாங்குவதற்கு போட்டி போடக்கூடும்
.
&w=750&resize=750,375&ssl=1)
