இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இணையச் சேவை தடை செய்யப்பட்டது. பிறகு இணையச் சேவை கொடுத்த பிறகு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இரு பெண்கள் ஆடைகள் அற்று சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியது. அதுவே அந்த மாநிலத்தின் கோர நிலைமையை மக்களுக்குக் காட்டியது.
பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மணிப்பூரில், மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகங்களுக்கிடையே உருவான கலவரம், ஓராண்டைக் கடந்தும் நீடித்துவருகிறது.
அண்மையில், மணிப்பூர் மாநிலத்தின், ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வீடுகள், கடைகளுக்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட குக்கி சமூகத்தினர், சிஆர்பிஎஃப் படையினரின் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மெய்தி இன மக்கள் தங்கியிருந்த முகாம்களில் இருந்து 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமான நிலையில், அவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, மெய்தி சமூகத்தினர் நடத்திய போராட்டத்திலும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், ஜிரிபாமில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் இரு சமூகங்களிலும் மாறி மாறி சடலங்கள் மீட்கப்படும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ எட்டியுள்ளது.
அதேபோல், முதலமைச்சர், உட்பட 13 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து, மணிப்பூரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இப்படியான பரபரப்பான சூழலில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (18-ம் தேதி) மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது. அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் படி என்.ஐ.ஏ. விசாரணையும் துவங்கியுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனையும் நடத்துகிறார்.
இதே சமயத்தில், மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்துவரும் சித்தார் மிருதுல் வரும் 21-ம் தேதியோடு பணி ஓய்வு பெறுகிறார். இதனால், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதையும் படியுங்கள் :
அடுத்தடுத்து விலகும் மா.செ.க்கள்! நாதகவில் அதிர்ச்சி
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கிருஷ்ணகுமார் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பரிந்துரையை கொலிஜியம், மத்திய அரசுக்கு அனுப்பியது. அதனை ஏற்ற மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளது.
நீதிபதி சித்தார் மிருதுல் 21-ம் தேதி ஓய்வு பெற்றதும் அந்தப் பொறுப்பை நீதிபதி கிருஷ்ணகுமார் ஏற்கவுள்ளார். இவர் வரும் 2025-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)