திருநெல்வேலி மாவட்டம் நாஞ்சான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகதாஸ். இவரது மகன் மாரியப்பன் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். மாரியப்பன் தீயணைப்புத்துறையில் இருந்து கொண்டே தடகளப்போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கான உலக தடகளப் போட்டிகளுக்காகத் தீயணைப்புத்துறையின் இயக்குநர் ஆபாஸ் குமார் மற்றும் உதவி இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பெயரில் டென்மார்க் நாட்டிற்குச் சென்றார்.
இதற்கு முன்பாக சென்னையில் பணியாற்றி வந்த அவருக்கு திருநெல்வேலியில் பணிபுரிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அண்ணா விளையாட்டு மைதானத்தில், நாரணம்மாள்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் வழி காட்டுதலின் அடிப்படையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: நவராத்திரி வழிபாட்டிற்கு விதவிதமாய் கொலு பொம்மை விற்பனை… குமரியில் இந்த இடம் தான் பேமஸ்…
டென்மார்க்கில் நடைபெற்ற தீயணைப்புத் துறை வீரர்களுக்கான தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மாரியப்பன், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தயங்களில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்த அவரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வரவேற்றனர். இதுகுறித்து மாரியப்பன் கூறுகையில், “11ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தான் தடகளப் போட்டி பயிற்சி பெற ஆரம்பித்தேன். மூர்த்தி சார் என்னைப் பார்த்து மைதானத்திற்கு வர சொன்னார். அவர் வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற்றேன். எனக்கு உணவும் அவர் வீட்டிலிருந்து கொண்டு வருவார். கவர்மெண்ட் விடுதியில் தங்கினேன்.
11ஆம் வகுப்பின் போது தமிழ்நாட்டிற்காக விளையாடினேன். இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் தடகளப் போட்டியில் 8வது இடத்தில் இருந்தேன். குடும்ப சூழ்நிலை, கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகள் விளையாடவில்லை. பின்னர் 20 வயதுக்குக் கீழ் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றேன். 2022ஆம் ஆண்டு தீயணைப்புத் துறையில் பணிக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து விளையாடுவதற்குத் தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் உதவி செய்தனர்.
இதையும் படிங்க: மூவேந்தர்களையும் ஒற்றுமையாக்கிய ஔவையார்… கன்னியாகுமரியில் இப்படி ஒரு கோவிலா…
ஒருமுறை கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக விளையாடச் செல்லக்கூடிய இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் சென்றேன். தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் 4 மாதம் ஓய்வெடுத்து பின்னர் விளையாட்டில் கவனம் செலுத்தினேன். கடைசியாகக் குஜராத்தில் நடைபெற்ற போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் பெற்றேன். இதன் காரணமாக இந்தியாவிற்கு விளையாடுவதற்காக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படி இருக்கையில் அங்கு செல்வதற்காக இருந்த நேரத்தில் மழை காரணமாக ரயில் பயணம் ரத்தானது. உடனே எனக்கு உயர் அதிகாரி ஒருவர் உதவியுடன் டெல்லிக்கு விமானத்தில் சென்றேன். அங்கிருந்து வெளிநாட்டிற்குச் சென்றேன். அங்கே சென்றவுடன் பயிற்சியின் போது கிளைமேட் மாறுதலினால் கொஞ்சம் திணறினேன். தொடர்ந்து 200 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றவுடன் நம்பிக்கை கிடைத்தது. இதன் காரணமாகத் தொடர்ந்து மற்ற போட்டிகளில் கலந்து கொண்டு நான்கு தங்கப் பதக்கம் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.
கூலி வேலை செய்து தனது மகனைப் படிக்க வைத்ததாகவும், இந்தியாவிற்கு அவர் விளையாடி பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் அரசு தனது மகனுக்குத் தேவையான உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)