இந்நிலையில், காணாமல்போன ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு மணிப்பூா்-அஸ்ஸாம் எல்லையில் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஜிரிபாம் மாவட்டத்தில் பராக் நதியில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தையின் உடல்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அஸ்ஸாமின் சில்சாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொதுமக்கள் போராட்டம்: இந்தத் தகவல் பரவியதையடுத்து, பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலைகளில் டயா்களை எரித்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினா். கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இணையச் சேவையும் முடக்கப்பட்டது.
அமைச்சா்கள், எம்எல்ஏ-க்களின் வீடுகள் முற்றுகை: இந்த மாவட்டங்களில், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சபம் ரஞ்சன் உள்பட 3 அமைச்சா்கள் மற்றும் 6 எம்எல்ஏ-க்களின் வீடுகள் போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டன. இதில், மாநில முதல்வா் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆா்.கே.இமோ உள்பட 3 எம்எல்ஏ-க்களின் வீடுகளை சூறையாடிய போராட்டக்காரா்கள், அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தனா். அவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். மீண்டும் வெடித்துள்ள போராட்டங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.

