புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கின் புக்கிட் தெங்காவில், ட்ரெய்லர் லோரி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த கொள்கலன் ஒன்று திடீரென உருண்டு காரின்மீது விழுந்ததில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த விபத்தில் சிக்கி 21 வயதுடைய லீ ஸி ரூ என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
அந்தப்பெண் போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் காத்திருந்தபோது, எதிர்புறத்திலிருந்து வந்த லோரி திடீரென இடது பக்கம் திரும்பியது.
இதன் காரணமாக, கொள்கலன் பாதிக்கப்பட்ட பெண்ணின் கார்மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் காரில் தனியாக பயணம் செய்தார் என்றும், வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் மற்ற சில வாகனங்களும் சேதமடைந்தன. காயமடைந்த மற்றோர் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததற்கு முன்னரே, காயமடைந்த ஓட்டுநரை வழிப்போக்கர்கள் மீட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்துகிறது.


